ஐபிஎல் அணிகளில் வெளிநாட்டு முதலீடு கண்டுபிடிப்பு - நேரடி வரிகள் வாரியம் விசாரிக்கிறது
டெல்லி: பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் அணிகளில் வெளிநாட்டினர் முதலீடு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.இதையடுத்து இதுகுறித்து விசாரிக்குமாறு மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் வெளிநாட்டு வரி பிரிவு விசாரணை நடத்தவுள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளில் முறைகேடாக பணம் முதலீடு செய்யப்பட்டு இருப்பது குறித்து வருமான வரித்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதற்காக சண்டிகர், கொச்சி, ஜெய்ப்பூர், மும்பை மற்றும் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் 8 விசாரணை குழுக்களை வருமான வரித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
அணிகளின் ஏலம், வீரர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட செலவுகள், வரி செலுத்திய விவரங்கள் உள்ளிட்ட பண பரிவர்த்தனைகளை அந்த குழுவினர் விசாரித்து வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் இந்த விசாரணை நடைபெறுகிறது. இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐ.பி.எல். நிர்வாக அலுவலகங்களிலும் அதிரடி சோதனை நடைபெற்றது.
இந்த சூழ்நிலையில், பல்வேறு ஐ.பி.எல். அணிகளில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலர் முதலீடு செய்துள்ள முக்கிய ஆதாரம் கிடைத்துள்ளது. ஆனால், ஒட்டு மொத்த பணபரிமாற்ற தகவல்களும் வருமான வரித் துறையினரிடம் சிக்கவில்லை. குறிப்பாக பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் அணிகளில் வெளிநாட்டினர் முதலீடு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் வெளிநாட்டு வரி பிரிவுக்கு மும்பையில் விசாரணை நடத்தும் வருமானவரி குழுவினர் கடிதம் எழுதியுள்ளனர். சுவிட்சர்லாந்து மற்றும் வரி ஏய்ப்போருக்கு சொர்க்க பூமியாக திகழும் சில வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள முதலீடுகள் குறித்து கண்காணிக்குமாறு அதில் கோரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications