இந்தியா எந்த நெருக்குதலும் தரவில்லை-இலங்கை வெளியுறவு அமைச்சர்
கொழும்பு: இந்தியா ஈழத் தமிழர் விவகாரத்தில் இலங்கைக்கு எந்த ஒரு நெருக்குதலையும் தரவில்லை என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரிஸ் கூறியுள்ளார்.
இலங்கை தனக்கென்ற கொள்கையை கொண்டது. அதற்கு எந்த ஒரு நாடும் நெருக்குதலைத் தர முடியாது என்றும் கூறினார் அவர்.
அன்மையில் இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது ஈழத் தமிழர் விவகாரம் தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் ராஜபக்சேவை சந்தித்தனர். இவ் விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தினர்.
அதிபர் ராஜபக்சேவின் இந்தியப் பயணம் குறித்து அமைச்சர் ஜி.எல். பெரிஸ் கூறியதாது:
இந்தியா-இலங்கை இடையிலான உறவு வலுவாக உள்ளது. ஈழத் தமிழர்கள் பிரச்சனை உள்பட எந்த விஷயத்திலும் இந்தியா நெருக்குதல் தரவில்லை. மேலும் அதிபரின் 4 நாள் இந்தியப் பயணம் வெற்றிகரமானதாகவும், இருநாட்டு உறவை மேம்படுத்துவதாகவும் அமைந்தது என்றார்.
தமிழக எம்.பி.க்கள் ராஜபக்சேவை சந்தித்தது குறித்து கேட்டபோது, "ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான தீர்வு காண அரசியல் சாசன சட்டத்தை திருத்துவது குறித்து பேசப்பட்டது'' என்றார்.
இலங்கையில் ரயில்வே பணிகள், அனல் மின்நிலையம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக இந்தியா ரூ.4,700 கோடி வரை கடன் தர சம்மதித்துள்ளது. மேலும் விமானநிலையம் மற்றும் துறைமுக கட்டுமானப் பணிகளில் உதவுவதாகவும் இந்தியா உறுதி அளித்துள்ளது என்று பெரிஸ் கூறினார்.