ஆயுதக் கொள்முதல் ஊழல்: பொன்சேகாவுக்கு கோர்ட் உத்தரவு
கொழும்பு: இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது ஆயுதங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், சரத் பொன்சேகா வரும் ஜூன் 23ல் நேரில் ஆஜராக வேண்டும் என கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்போது இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக பொன்சேகா உள்ளார்.கடந்த ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிரானப் போரில், ஆயுதங்கள் சப்ளை செய்யும் உரிமையை ஹிகார்ப் நிறுவனத்துக்கு அப்போது ராணுவத் தளபதியாக இருந்த பொன்சேகா அளித்ததுள்ளார்.
இதில் பல கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக இலங்கை அரசு குற்றம்சாட்டியுள்ளது.
இந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக ஹிகார்ப் நிறுவனத்தின் தலைவரும், பொன்சேகாவின் மருமகனுமான தனுனா திலகரத்னேவை கைது செய்ய கடந்த பிப்ரவரியில் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக வரும் ஜூன் 23ம் தேதி கொழும்பு நீதிமன்றத்தில் பொன்சேகா ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது, பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இலங்கை கடற்படை தலைமையகத்தில் பொன்சேகா சிறை வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, கென்யா தலைநகர் நைரோபியில் செப்டம்பர் மாதம் நடக்க உள்ள காமன்வெல்த் ஐக்கிய நாடாளுமன்ற மாநாட்டில் கலந்துகொள்ள, பொன்சேகாவுக்கு இலங்கை நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
இது குறித்து கருத்துத் தெரிவித்த இலங்கை பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கெஹெலியா ரம்புகவெல்லா, நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் மாநாட்டில் கலந்துகொள்ள பொன்சேகாவுக்கு, நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், வெளிநாடு செல்லவேண்டுமெனில், நீதிமன்றத்தின் ஒப்புதலை அவர் பெற வேண்டியது அவசியம் எனத் தெரிவித்தார்.