டெல்லி: இந்திய கம்யூ தலைவர் ராஜாவின் காரை திருடி விற்க முயற்சி!
டெல்லி: இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்குச் சொந்தமான காரைத் திருடி விற்க முயன்ற நபர் கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ராஜ்யசபா எம்பியான டி.ராஜாவின் வீடு டெல்லி நாடாளுமன்ற வீதியில் துணை ஜனாதிபயின் இல்லம் அருகே உள்ளது.
இவரது பெயரிலான கட்சிக்கு சொந்தமான ஹோண்டா சிட்டி கார் கடந்த 29ம் தேதி ராஜாவின் வீட்டின் முன் திருடு போய்விட்டது.
இது குறித்து கார் டிரைவர் ராஜப்பன் மூலமாக ராஜா டெல்லி போலீசில் புகார் செய்தார்.
அந்த காரில் நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைய அனுமதிக்கும் எம்பிக்கான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றத்துக்குள் அந்தக் கார் நுழைந்துவிடாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இந் நிலையில் கார் டீலர் ஒருவரிடம் இந்த கார் விற்பனைக்கு வந்தது. நாடாளுமன்ற அனுமதி ஸ்டிக்கரை அகற்றாமலேயே கார் விற்பனைக்கு வந்ததைப் பார்த்து அதிர்ந்த அவர் போலீசுக்கு தகவல் தந்தார்.
இதையடுத்து போலீசார் விரைந்து காரை மீட்டனர். காரை விற்க முயன்ற யோகேஷ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இவர் முன்பு ராஜாவிடம் டிரைவராக பணியாற்றியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கம் கட்சிக்காக பரிசாக வழங்கிய கார் இது. இதை பெரும்பாலும் கட்சியின் தேசியச் செயலாளர் பர்தனும் ராஜாவுமே பயன்படுத்தி வந்தனர்.