கொடநாடு டீ பேக்டரில் நேற்று சோதனை இல்லை-உரிய நேரத்தில் ஆய்வு என அதிகாரி தகவல்
ஊட்டி: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தங்கியுள்ள கோடநாடு எஸ்ட்டேடில் கட்டப்பட்டு வரும் டீ பேக்டரி குறித்து நேற்று நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட சோதனை நடக்கவில்லை. மாறாக உரிய நேரத்தில் அது நடைபெறும் என விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரி உதயச் சந்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 28ம் தேதி கோவையில் முதல்வர் கருணாநிதியுடன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, செய்தியாளர் ஒருவர் கொடநாடு எஸ்டேட்டில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஒரு பெரிய டீ பேக்டரி கட்டி வருகிறார். அந்த டீ பேக்டரி அரசு விதி முறைகளை மீறி கட்டப்பட்டு வருவதாக தெரிகிறது என்றும், அதன் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படுமா என்றும் கேள்வி எழுப்பினார்.
இந்தக் கேள்விக்கு முதல்வர் கருணாநிதி பதிலளிக்கையில், இந்த செய்தி புதிரானது என்றும், எனினும் அவசரப்பட்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், சட்டரீதியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்றும் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, இந்தப் பிரச்சனை குறித்து உரிய முறையில் விசாரித்து உண்மைத் தகவல்களை அரசுக்குத் தெரிவிப்பதற்காக ஊரக வளர்ச்சி இயக்குநர் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இந்தப் பிரச்சனை பற்றி பூர்வாங்க விசாரணையை மேற்கொண்டு அரசுக்கு விரைவில் அறிக்கை தருவார் என அரசு தெரிவித்திருந்தது.
இந் நிலையில் நேற்று கொடநாடு எஸ்டேட் டீ பேக்டரி விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
அதற்கேற்ப விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள உதயச்சந்திரன் ஊட்டிக்கு வந்தார். இதையடுத்து பரபரப்பு ஏற்பட்டது. கோடநாடு எஸ்டேட்டுக்கு முன்பாக அதிமுகவினர் குவிந்தனர்.இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இருப்பினும் உதயச்சந்திரன் சோதனைக்கு வரவில்லை. மாறாக விருந்தினர் மாளிகையில் இருந்தபடி விசாரணையை தொடங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் அர்ச்சனா பட்நாயக், கோடநாடு ஊராட்சித் தலைவர், மாவட்ட வருவாய் அதிகாரி குப்புசாமி சகிதம், ஊரக வளர்ச்சி துறை, வருவாய் துறை, நகர ஊரமைப்புத்துறை மற்றும் வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளிடம் அவர் விசாரணை நடத்தினார்.
பின்னர் அவர் தன்னை சந்தித்த செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கோடநாடு எஸ்டேட் பிரச்சினை தொடர்பாக பல்வேறு அரசு துறை அதிகாரிகளுடன் விசாரணை நடத்தினேன். ஊரக வளர்ச்சி துறை, வேளாண்மை பொறியியல் துறை, புவியியல் துறை, நகர ஊரமைப்புத்துறை, வனத்துறை, வருவாய் துறை ஆகிய துறை அதிகாரிகளுடன் முதல் கட்ட விசாரணை நடத்தப்பட்டது. ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து 2 நாட்களாக விசாரணை நடைபெற்று வருகிறது.
கோடநாடு ஊராட்சி உதவியாளரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஊராட்சி தலைவரிடமும் விசாரணை நடத்தப்படும். விசாரணைகக்கு பின்னர் கோடநாடு எஸ்டேட்டில் உரிய நேரத்தில் கள ஆய்வு செய்யப்படும் என்றார்.
நேற்று சோதனை நடைபெறவில்லை என்ற போதிலும் தொடர்ந்து கோடநாடு எஸ்டேட் பகுதியில் அதிமுக தொண்டர்கள் முகாமிட்டபடி உள்ளனர். இதனால் பரபரப்பு நீடிக்கிறது.












Click it and Unblock the Notifications