தமிழக மீனவர்களைத் தாக்கி விரட்டியடித்து இலங்கை கடற்படை மீண்டும் அட்டகாசம்
500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை ரவுடிக் கும்பல் கொன்று குவித்து விட்டது. இதுவரை இந்தத் துயரத்திற்கு விமோச்சனம் இல்லை. தொடர்ந்து இலங்கை தாக்கிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் மத்திய அரசோ அமைதியாக வேடிக்கை பார்த்தபடிதான் உள்ளது. மாநிலத்தில் அமையும் அரசுகளோ மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதோடு நின்று விடுகின்றன.
தொடர் கதையாகி வரும் இந்த துயரத்திற்கு முடிவு தெரியாமல் தமிழக மீனவர்கள் குமுறிக் கொண்டுள்ளனர். கிட்டத்தட்ட இந்தியா மீது இலங்கை தொடுத்துள்ள மறைமுகப் போராகவே கருதப்படுகிறது.
செல்லப்பன் என்ற நாகை மாவட்ட மீனவர் 2 நாட்களுக்கு முன்பு படுகொலை செயய்பப்ட்ட சம்பவத்தின் அதிர்ச்சி குறைவதற்குள் நேற்று ராமேஸ்வரம் மீனவர்களைத் தாக்கி விரட்டியுள்ளது இலங்கை கும்பல்.
ராமேஸ்வரத்திலிருந்து நேற்று முன்தினம் 623 விசைப் படகுகள் மீன்வளத் துறையினரின் அனுமதி பெற்று கடலுக்கு சென்றன. அவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 8 ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டி அடித்தனர்.
தமிழக மீனவர்களின் படகுகளில் ஏறி அவற்றில் இருந்த விலை உயர்ந்த இரால், நண்டு, கனவாய் போன்ற மீன்களை அள்ளிச் சென்று விட்டனர். ஒரு சில படகுகளில் மீனவர்கள் வைத்திருந்த செல்போன்களையும் இலங்கை கடற்படைக் கும்பல் பறித்துச் சென்று விட்டது.
இதையடுத்து உயிருக்கு பயந்து போன ராமேஸ்வரம் மீனவர்கள் அனைவரும் குறைந்த அளவு மீன்களுடன் கரை திரும்பினர்.
இந்த சம்பவத்தில் சகாயம் என்ற மீனவர் காயமடைந்துள்ளார். அவர் இதுகுறித்துக் கூறுகையில்,
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது வாடிக்கையாக உள்ளது. இதுகுறித்து மத்திய-மாநில அரசுகள் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை. மீனவர்கள் நலனை அரசு கண்டு கொள்ளாமல் இருந்தால் அனைத்து மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என்றார் குமுறலுடன்.