காந்தி விருது பெற்ற டிஎஸ்பி லஞ்ச வழக்கில் கைது-உடனே நெஞ்சுவலி!
சேலம்: உத்தமர் காந்தி விருது பெற்ற டிஎஸ்பி லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டார். நெஞ்சு வலிப்பதாக அவர் கூறவே உடனே மருத்துவமனையில் அனுமதித்தனர்.
கோழிப் பண்ணை பிரச்சினையில் ரூ.1.50 லட்சம் வாங்கியதற்காக நாமக்கல் போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசனும், அவரது உதவியாளர் சுப்பிரமணியமும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து லஞ்ச பணம் ரூ.1.50 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது.
போலீசார் சீனிவாசனை நாமக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் கன்னையன் அவரை 26-ம் தேதி வரை சிறை காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
சிறையில் அடைக்கும் முன் பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அவரை போலீசார் அழைத்து சென்றனர். அங்கு திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக அவரை சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இதயநோய் சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இவரை தொடர்ந்து அவருடன் கைது செய்யப்பட்ட உதவியாளர் சுப்பிரமணியமும் நேற்று சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு இருவரும் பலத்த காவலுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
துணை சூப்பிரண்டு சீனிவாசன் நாமக்கல் மாவட்டம் பிரிக்கப்பட்ட காலத்தில் இருந்தே அங்குள்ள பல இடங்களில் பல்வேறு பதவிகள் வகித்தவர். இவர் சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியபோது கள்ளச் சாராய ஒழிப்பில் சிறப்பாக பணியாற்றியமைக்காக தமிழக அரசின் உத்தமர் காந்தி விருது' பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications