For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எங்களுக்கே சுயமரியாதையை கற்றுக் கொடுக்க நினைக்கிறதா சிபிஎம்? கருணாநிதி மீண்டும் தாக்கு

Google Oneindia Tamil News

சென்னை: நாங்கள் என்ன தீண்டாமையை ஒழிக்க விரும்பாதவர்களா எங்களுக்கே
சுயமரியாதையை கற்றுக் கொடுக்க நினைக்கிறதா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
என்று கேட்டுள்ளார் முதல்வர் கருணாநிதி.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்
நடந்த காமராஜர் பிறந்த நாள் விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டார்.

இடை நிலைக் கல்வித் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில்
முதல்வர் பேசியதாவது:

உத்தபுரம் என்று ஒரு கிராமம். அங்கே பல ஆண்டுக் காலமாக ஒரு சுவர். ஆதி
திராவிடர்களையும் உயர் சாதிக் காரர்களையும் ஒன்று படுத்தக் கூடாது என்பதற்காக
இருந்த ஒரு சுவர். காமராஜர் காலத்திலே கூட அது இருந்திருக்கலாம். யாரும்
அதைப்பற்றி அப்போது கவலைப்படவில்லை, அவரிடம் சொல்லவும் இல்லை என்று
நினைக்கிறேன்.

அதற்குப் பிறகு அந்தச் சுவர் எத்தனையோ ஆண்டு காலமாக உள்ள சுவர். ஏன் அந்த சுவர்
என்ற கேள்வியை நான் தான் கேட்டேன். இதுமாதிரிக் காரணம். ஆதிதிராவிடர்கள்
வந்துவிடக்கூடாது என்பதற்காக சுவர் வைத்திருக்கிறார்கள் என்றார்கள். உடனே
மாவட்ட ஆட்சித் தலைவரைத் தொடர்பு கொண்டு நாளைக்கே அந்தச் சுவரை அகற்றுங்கள்
என்று சொன்னேன். அவ்வாறே அந்தச் சுவர் அகற்றப்பட்டது.

அதற்காக அங்கேயுள்ள உயர்சாதி மக்கள் எல்லாம் கோபித்துக் கொண்டு போய் ஒரு
மலையிலே உட்கார்ந்து விட்டார்கள். நாங்கள் அந்த ஊரிலேயே இருக்க மாட்டோம், இந்த
ஆட்சிலேயே சுவரை அகற்றி, தலித் மக்களையெல்லாம் உள்ளே விட்டு விட்டார்கள் என்று
கோபித்துக் கொண்டு போய் விட்டார்கள்.

அப்படி போனவர்ளை பலமுறை போய் சமாதானம் செய்து, மாவட்ட ஆட்சித் தலைவரை விட்டு
சமாதானம் பேசச் செய்து, நானே அவர்களை அழைத்துப் பேசச் செய்து, பிறகு அந்த உயர்
சாதி மக்கள் ஓரளவு இணங்கி வந்தார்கள். பிரச்சினை முடிந்தது.

ஆனால் சில கட்சிகளுக்கு பிரச்சினை முடியவில்லை. ஏனென்றால் முடிந்துவிட்டால்
பிறகு அவர்களுக்கு வேலை இருக்காது அல்லவா? அதற்காக மறுபடியும் இரண்டு பேரையும்
முடுக்கி விட்டு கலகத்தை உண்டாக்க, உத்தப்புரத்திலும் அதே கிளர்ச்சிதான்.

திமுகவைப் பொறுத்தவரையில் அல்லது எங்களுக்கு துணையாக, தோழமையாக இருக்கின்ற
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் நாங்கள் என்ன, தீண்டாமையை
விரும்புகின்றவர்களா? சாதியை விரும்புகின்றவர்களா? நாங்கள் ஏதோ சாதியை ஒழிக்க
விரும்பாதவர்கள் மாதிரியும், இவர்கள் தான் சாதியை ஒழிக்கப் புறப்பட்டவர்கள்
மாதிரியும், இவர்கள் தான் ஆதிகாலத்து சுய மரியாதைக்காரர்கள் என்பதைப் போலவும்,
எங்களுக்கு சுய மரியாதையையே இவர்கள் தான் கற்றுக் கொடுத்தவர்கள் என்பதைப்
போலவும் சில பேர் போராடுகிறார்கள் என்றால், இதையெல்லாம் நான் காமராஜருடைய
விழாவிலே நினைவுப்படுத்த காரணம், அவர் ஆட்சியிலும் இப்படிப்பட்ட காரியங்கள்
நடந்ததுண்டு. அவர் சமாளித்ததும் உண்டு.

சாதி என்ற நாகம் தீண்டாமல் நாடு, இனம், மொழி என்ற உணர்வுடன் அனைவரும்
ஒன்றுமையுடன் இருப்பதற்கு, காமராஜர் பிறந்த நாளில் உறுதி ஏற்போம். நாம்
ஒற்றுமையாக இருப்போம். நல்லாட்சியை வீழ்த்தாமல் வாழ்வதற்கு மக்களை நாம் ஒன்று
படுத்துவோம். மக்களிடத்திலே ஒரு உறவுமுறையை ஏற்படுத்தி ஒற்றுமையுடன் இருப்போம்.

காமராஜர் பிறந்த நாள் விழாவை கல்வி வளர்ச்சி நாளாக ஆண்டு தோறும் எந்த ஆட்சி
வந்தாலும் கடைபிடிக்க வேண்டும் என்ற நிலையை உறுதிப்படுத்தி இருக்கிறோம். இன்று
கூட ஒரு நண்பர் பத்திரிகையில் ஒன்றை சுட்டிக்காட்டி இருக்கிறார். காமராஜர்
நினைவிடத்தில் அணையா விளக்கு அமைக்க வேண்டும், அண்ணா நினைவிடத்தில்,
எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் இருப்பது போன்று அங்கும் அணையா விளக்கு வேண்டும்
என்று கோரிக்கை விடுத்துள்ளார். அந்த குறை இனி நீங்கும். சென்னை காமராஜர்
மண்டபத்தில் அணையா விளக்கு உடனடியாக அமைக்கப்படும். இந்த திங்களுக்குள் அந்த
குறை உடனடியாக நீக்கப்படும் என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X