Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டாலின் அறிவித்துள்ள போராட்டம் கோர்ட்டை மிரட்டுவதாக உள்ளது-ஜெ.

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு, எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு குறித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஸ்டாலின் அறிவித்து இருப்பது நீதிமன்றத்தையே மிரட்டுவது போல் உள்ளது. இது போன்ற அறிவிப்பிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஆளும் கட்சியின் அராஜகங்களை, அக்கிரமங்களை, அநியாயங்களை எதிர்த்து, ஆளும் கட்சியின் மக்கள் விரோதச் செயல்களைக் கண்டித்து ஜனநாயக முறையில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்ற நடைமுறை. ஆனால், தமிழ் நாட்டில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவரை எதிர்த்து ஆளும் கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தும் நிலை தமிழகத்தில் நிலவுகிறது.

அரசியல் ரீதியாக என்னைப் பழிவாங்க வேண்டும் என்ற தீய எண்ணத்தில், சிறுதாவூர் என்கிற இடத்தில் ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை நான் அபகரித்து வீடு கட்டிக்கொண்டு விட்டதாகத் தெரிவித்து, அது குறித்து விசாரிக்க ஒரு விசாரணை ஆணையத்தை 2006 ஆம் ஆண்டு தி.மு.க. அரசு அமைத்தது.

இதை விசாரித்த விசாரணை ஆணையம், இந்த நிலத் திற்கும், எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தீர்ப்பளித்தது. இதன் பின்னரும் எனக்கு எதிராக தி.மு.க. சார்பில் சிறுதாவூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று முதல்வராகிய கருணாநிதியால் அறிவிக்கப்பட்டு ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக முதல்வர் பொறுப்பில் இருப்பவர் ஆர்ப்பாட்டம் நடத்தியது என்பது இதுவரை கேள்விப்பட்டிராத செயல் ஆகும்.

தற்போது, மீண்டும் திமுக அரசால் என் மீது புனையப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து தி.மு.க. இளைஞர் அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்து இருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கான தேர்தல் விரைவில் வர இருக்கின்ற சூழ்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் எனக்கு எப்படியாவது தண்டனை பெற்றுத்தர வேண்டும்; என்னை எப்படியாவது அவமானப்படுத்த வேண்டும்; என்னை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று முயற்சி செய்தார்.

அது நிறைவேறாமல் போகவே, மக்களுக்கு எந்தவிதத்திலும் பயனளிக்காத போராட்டத்தைத் தற்போது கருணாநிதியின் தூண்டுதலின் பேரில் அறிவித்து இருக்கிறார் மு.க. ஸ்டாலின்.

தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் மூலம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கைத் தொடர்ந்து, இந்த வழக்கை கிட்டத்தட்ட ஏழு ஆண்டு காலம் நிறுத்தி வைத்த கருணாநிதி, தற்போது நான் காலம் கடத்துகிறேன் என்று கூறி ஆர்ப்பாட்டம் நடத்துவது கேலிக் கூத்தாக உள்ளது.

இந்தச் சூழ்நிலையில், இது போன்றதொரு போராட்டத்தைக் கருணாநிதியின் அனுமதியோடு மு.க. ஸ்டாலின் அறிவித்து இருப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் ஆகும். மேலும், நீதிமன்ற நடவடிக்கைகளில் நேரடியாக தலையிடுவது போல் அமைந்துள்ளது.

பொதுவாக, நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற வழக்கு குறித்து எதையும் குறிப்பிட எனக்கு விருப்பமில்லை என்றாலும், தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் என்று அறிவித்த பிறகு, இதில் உள்ள உண்மை நிலையை விளக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்த வழக்கில் சாட்சிகளின் வாக்குமூலம் தமிழிலிருந்து ஆங்கிலத்தில் தவறாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதனைச் சரி செய்யாமல், முறையான நீதி விசாரணை நடைபெற முடியாது. எனவே, தவறாக ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டதை சரிசெய்ய வேண்டும் என்று தான் நீதிமன்றத்தில் கோரிக்கை விடப்பட்டது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நியாயமான கோரிக்கையை நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டுவது தமிழ் நாட்டு மக்களை அவமதிக்கும் செயல் என்று ஸ்டாலின் கூறியிருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது. தன் விருப்பப்படி வழக்கு நடத்தப்பட வேண்டும் என்று கருணாநிதி எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்?

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு, எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு குறித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஸ்டாலின் அறிவித்து இருப்பது நீதிமன்றத்தையே மிரட்டுவது போல் உள்ளது. இது போன்ற அறிவிப்பிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்று கருணாநிதி எழுதிய கடிதத்திற்கு, கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பிய பிறகு தான் தண்ணீர் திறந்து விட முடியும் என்று பதில் வந்திருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. நடுவர் மன்றத் தீர்ப்பிற்கு எதிராக செயல்படும் கர்நாடக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த கருணாநிதி தயாரா?

நீதிமன்றத்தில் உள்ள ஒரு பொருள் குறித்து நீதி மன்றத்தில் தான் போராட வேண்டும். அதை விட்டு விட்டு, நீதிமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது நீதிக்கு எதிரான செயல் என்று கேட்டுள்ளார் ஜெயலலிதா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+