சென்னை கடல் குடிநீர்த் திட்டம்-முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்
இதன் மூலம் சென்னைக்கு தினசரி 10 கோடி லிட்டர் கடல் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.
சென்னைப் பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியமும், சென்னை கடல் நீர் குடிநீராக்கல் நிறுவனம் (வாட்டர் டிசாலிநேசன் லிமிடெட்) இணைந்து சென்னை மாநகரின் தேவைக்காக கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்துகின்றன. இந்தத் திட்டப் பணிகள் முடிவடைந்து தற்போது பயன்பாட்டுக்குத் தயாராகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளி கிராமத்தில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தத் திட்டத்திற்கான ஒப்பந்தம் கடந்த 2005ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் கையெழுத்தானது. தற்போது திமுக ஆட்சியில் இது நிறைவேற்றப்பட்டுள்ளது.
ரூ. 600 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள இத்திட்டம் தற்போது நிறைவடைந்துள்ளது. வடிவமைப்பின் பொறியியல் பணிகளை மேற் கொள்ளுதல், நிதியினை திரட்டுதல், உபகரணங்களை வாங்குதல், கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளுதல், திட்டத்தை செயல்படுத்துதல், தொடர்ந்து 25 ஆண்டுகள் நிர்வகித்தல் பின்னர் பெருநகர குடிநீர் வாரியத்திடம் ஒப்படைத்தல் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் கடல் நீரிலிருந்து தினந்தோறும் 10 கோடி லிட்டர் குடிநீர் கிடைக்கும். இந்த குடிநீர் வழங்கும் பணிகளை 25 ஆண்டுகள் சென்னை வாட்டர் டிசாலிநேசன் லிமிடெட் நிறுவனம் மேற்கொள்ளும்.
இத்திட்டத்தின் தொடக்க விழா இன்று மாலை 5மணிக்கு காட்டுப்பள்ளியில் நடைபெறுகிறது. முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தைத் திறந்து வைத்து விழாப் பேருரையாற்றுகிறார்.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். மீன்வளத்துறை அமைச்சர்க கே.பி.பி.சாமி வாழ்த்துரை வழங்குகிறார். தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி முன்னிலை வகிக்கிறார்.
திட்டம் தொடர்பாக சென்னை வாட்டர் டிசாலிநேசன் நிறுவன இயக்குனர் எஸ்.ராமச்சந்திரன் கூறுகையில், கூறுகையில், கடல்நீரை குடிநீராக்கும் இந்த திட்டத்தின் கட்டுமானப் பணிகள் முழுமையடைந்து விட்டது. சென்னை பெருநகரின் குடிநீர் தேவைகள் இதன் மூலம் பூர்த்தியாகும். மாநகரில் அவ்வப்போது ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையை போக்குவதற்கு இந்த திட்டம் பெரிதும் உதவும்.
இத்திட்டத்தின் மூலம் சென்னை நகரில் 20 லட்சம் மக்கள் பயன் அடைவார்கள். குடிநீர் வாரியத்திற்கு லிட்டருக்கு 4.8 பைசா என்ற அடிப்படையில் குடிநீர் வழங்கப்படும்
திட்டப் பணிகள் அனைத்தும் முடிவடைந்து கடந்த 25ம் தேதி முதல் சென்னை பெருநகர குடிநீர் வாரியத்துக்கு இத் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 4 கோடி லிட்டர், 6 கோடி லிட்டர் என உயர்ந்து தற்போது 8 கோடி லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. முதல்வர் கருணாநிதி
இத்திட்டத்தை துவக்கும்போது 10 கோடி லிட்டராக விநியோகிக்கப்படும் என்றார்.
இத்திட்டத்திற்காக காட்டுப்பள்ளியில், 2.5 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ் நிலை தொட்டி மற்றும் நீரேற்றும் நிலையம், மணலியில் 2.5 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை தொட்டி, மாதவரத்தில் 10 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை தொட்டி மற்றும் நீரேற்றும் நிலையம், செங்குன்றத்தில் 6 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை தொட்டி ஆகிய உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதை தவிர, சுமார் 38 கிலோ மீட்டர் நீளத்திற்கு குடிநீர் கொண்டு செல்லும் குழாய்கள் பதிக்கப்பட்டு, சென்னை நகர விநியோகத்திற்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.