மின் கட்டண உயர்வைப் பார்த்து கையைப் பிசைவதைத் தவிர மக்களுக்கு வேறு வழியில்லை-விஜயகாந்த்
புலி வருகிறது, புலி வருகிறது என்றார்கள்; இப்பொழுது சற்றும் எதிர்பாராத நேரத்தில் புலியே வந்துவிட்டது. மின் கட்டண உயர்வைக் கண்டு மக்களுக்கு கையை பிசைவதை தவிர வேறு வழியில்லை என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
ஏற்கனவே, கடந்த 18 மாதங்களாக தொடர்ந்து ஏறி வரும் விலைவாசி உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவை போதாது என்று அண்மையில் பெட்ரோலியப் பொருட்களின் விலையை இந்திய அரசு உயர்த்தியது. தன் பங்குக்கு இப்பொழுது தமிழக அரசும் மின் கட்டணங்களை உயர்த்தியுள்ளது.
குடும்பச்செலவு இந்த விலைவாசி உயர்வின் காரணமாக இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் கணக்கிட்டுள்ளனர்.
மின்வாரியம் சொந்த மின் உற்பத்தி திட்டங்கள் மூலம் மின் உற்பத்தியை பெருக்குவதற்கு பதிலாக, வெளியில் இருந்து கூடுதல் விலை கொடுத்து மின்சாரம் வாங்குவது ஆண்டுதோறும் அதிகரித்து கொண்டிருக்கிறது. மின்வாரியம் செலவழிக்கும் 28 ஆயிரம் கோடி ரூபாயில் வெளியில் இருந்து மின்சாரம் வாங்குவதற்கே 17 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்கிறது.
ஒரு யூனிட்டுக்கு இதனால் ரூ.8.50-க்கு மேல் செலவாகிறது. மேலும், மின் திருட்டு, மின்சாரம் அனுப்பப்படுவதில் இழப்பு, சரியான மீட்டர்கள் பொருத்தாமை, சரியானபடி கணக்கெடுத்து பில் போடாதது போன்றவற்றால் பெருமளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
மின்சாரத்தினுடைய அவசியம் கருதி அதை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்ற அக்கறை சிறிது கூட இல்லை. ஒரு யூனிட் மின்சாரம் மிச்சம் பிடிப்பது 2 யூனிட் மின்சாரம் உற்பத்தி சமம் என்பது இவர்களுக்கு அறவே புரிவதில்லை.
அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றக்கூடிய ஒரு பொது நிறுவனம் தனது நிர்வாக திறமைகளின் மூலமும், செலவுகளை குறைப்பதன் மூலமும், சிக்கன நடவடிக்கைகள் மூலமும், தான் செய்யும் சேவையில் விலையை ஏறாமல் பார்த்துக் கொள்வதிலேதான் இருக்கிறது.
புலி வருகிறது, புலி வருகிறது என்றார்கள்; இப்பொழுது சற்றும் எதிர்பாராத நேரத்தில் புலியே வந்துவிட்டது. மக்களுக்கு கையை பிசைவதை தவிர வேறு வழியில்லை.
பொதுமக்களை பாதிக்கும் வகையில் விலை உயர்வை அதிகப்படுத்தியும், பொருளாதார வளர்ச்சியை சீர்குலைக்கவும் இந்த மின் கட்டண உயர்வு வழிவகை செய்யுமாதலால், இந்த மின் கட்டண உயர்வை திரும்ப பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications