தமிழ் செம்மொழி மாநாட்டு தீர்மானங்களை நிறைவேற்ற மத்திய அரசுக்கு திமுக கோரிக்கை
டெல்லி: கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று மக்களவையில் திமுக கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, மக்களவையில் திமுக உறுப்பினர் தாமரைச் செல்வன் பேசுகையில்,
கோவையில் உலகம் போற்றும் வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை தமிழக அரசு வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
தமிழ் மொழியை நாட்டின் அதிகாரப்பூர்வமான மொழிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சமஸ்கிருதத்திற்கு வழங்கப்பட்டது போல தமிழ்மொழியின் ஆராய்ச்சிக்கும், வளர்ச்சிக்கும் போதுமான நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசைத் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
தேசிய கல்வெட்டியல் நிறுவனத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்திய மொழிகளில் இது வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுமார் ஒரு லட்சம் கல்வெட்டு எழுத்துகளில் 60,000 தமிழ்மொழியில் உள்ளது. எனவே, தேசிய கல்வெட்டியல் நிறுவனத்தை சென்னையில் அமைக்க வேண்டும்.
கடலில் மூழ்கிய குமரிக் கண்டம் மற்றும் பூம்புகார் ஆகியவற்றிற்காக ஆழ் கடல் தொல்பொருள் ஆராய்ச்சியை மேற்கொள்ள மத்திய அரசு விரிவான திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எனவே, உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானங்களை நிறைவேற்ற மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications