வன்னியில் 4 லட்சம் சிங்களர்களை குடியேற்ற முயற்சி
கொழும்பு: வன்னிப் பகுதியில் 4 லட்சம் சிங்களர்களை குடியேற்ற இலங்கை அரசு முயற்சித்து வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பியான சுரேஷ் பிரமேச்சந்திரன் எச்சரித்துள்ளார்.
அவர் கூறுகையி்ல், தமிழர் பிரச்சனைக்கு முறையான அரசியல் தீர்வை ஏற்படுத்த இலங்கை அரசு முயல வேண்டும். தமிழ் மக்களுக்கு நன்மை சேர்க்கும் வகையில் செயல்படும் தமிழர் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராகவே உள்ளோம்.
கிளிநொச்சியில் அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அங்கு தமிழ் மக்களை மீண்டும் குடியமர்த்துவது குறித்து வலியுறுத்தவில்லை.
வன்னியின் பெரும் பகுதிகள் ராணுவத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.
வன்னிப் பகுதியில் ராணுவத்தினரோடு சுமார் 4 லட்சம் சிங்களர்களையும் இலங்கை அரசு குடியமர்த்த முயற்சித்து வருகிறது. இதன்மூலம் இந்திய அரசுக்கும், தமிழ் கூட்டமைப்புக்கும் அளித்த வாக்குறுதியை இலங்கை அரசு மீறி வருகிறது.
இலங்கை வரவுள்ள இந்திய சிறப்புத் தூதர், பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகள் மற்றும் குடியமர்வு செய்யப்பட்ட பகுதிகளை இலங்கை அரசின் வழிகாட்டுதலின்றி, இந்தியத் தூதரின் துணையோடு பார்வையிட வேண்டும் என்றார்.
பிரபாகரன் தாயாருடன் தமிழ் கூட்டமைப்பு எம்.பி. சந்திப்பு:
இந் நிலையில் இலங்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. ஸ்ரீதரன் சந்தித்தார்.
இப்போது பருத்தித்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் பார்வதியம்மாள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சந்திப்பின்போது, மருத்துவமனையின் தலைமை அதிகாரி மயிலேறு பெருமாள், ஸ்ரீதரனிடம் பார்வதியம்மாளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து விளக்கினார்.












Click it and Unblock the Notifications