சந்தனக் கடத்தல் மன்னன் வீரப்பன் சமாதி அருகே மர்ம பிணம்
மேட்டூர்: மேட்டூர் அருகில் மூலக்காடு கிராமத்தில் வீரப்பன் சமாதி அருகே மர்ம நபரின் பிணம் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேட்டூரை அடுத்த கொளத்தூர் மூலக்காடு கிராமத்தில் சந்தனக் கடத்தல் மன்னன் வீரப்பனின் சமாதி உள்ளது. இந்த சமாதி அருகே ஒரு பிணம் மண்ணில் புதைத்தும் புதைக்கப்படாமலும் கிடந்தது. அதன் கால் பகுதி மட்டும் வெளியே தெரிந்ததால் அந்த பகுதி வழியாக சென்றவர்கள் பார்த்து விட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
இது பற்றி தகவல் அறிந்த கொளத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்திய போது, கழுத்து அறுபட்ட நிலையில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபரின் உடல் அங்கு புதைக்கப்பட்டது தெரிய வந்தது. அவரது வலது மார்பில் ரேவதி என்று பச்சை குத்தப்பட்டு இருந்தது. அந்த வாலிபரைப் பற்றி எந்த தகவலும் தெரியவில்லை. இவர் கொலை செய்யப்பட்டு 3 நாட்களுக்கு மேல் இருக்கும் என தெரிய வந்தது.
இதனையடுத்து, தாசில்தார் முன்னிலையில் அந்த வாலிபரின் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு, பின்பு அந்த உடல் அந்த இடத்திலே புதைக்கப்பட்டது. இந்த மர்ம கொலை குறித்து கொளத்தூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.