லடாக்: வெள்ளத்தில் சிக்கிய 33 ராணுவ வீரர்கள் கதி என்ன?

லே மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மேகங்கள் வெடித்து கனமழை கொட்டித் தீர்த்தது. Cloud burst என்ப்படும் இந்த இயற்கை சீற்ற நிகழ்வால் ஒரு மணி நேரத்தில் 250 மி.மீ. பேய் மழை பெய்தது.
இதனால் அந்த மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் லே பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. வீடுகள், கட்டிடங்கள், அரசு அலுவலகங்கள் முழுவதுமாக சேதமடைந்துள்ளன. சாலைகளும் பெயர்த்தெடுக்கப்பட்டு அலங்கோலமாக காட்சி அளிக்கின்றன.
இந்த வெள்ளப் பெருக்கில் லே பகுதியில் 160 பேர் பலியாகினர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன. ஆனால், மேலும் 600க்கும் மேற்பட்டோரை காணவில்லை. இவர்கள் உயிரோடு புதையுண்டு இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
லே பகுதியை வெள்ளம் பாதித்த அதே நாளில் லடாக் பகுதியில் சியாச்சின் பனிமலையிலும் கன மழை பெய்தது. அங்கு எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 33 ராணுவ வீரர்கள் ஷையோக் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதுவரை அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
எனவே அந்த ராணுவ வீரர்களை கண்டுபிடிக்க பாகிஸ்தானின் உதவியும் கோரப்பட்டுள்ளது. வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களை எதிர்த்து போராடுவதற்கான பயிற்சிகளை அந்த ராணுவ வீரர்கள் பெற்றிருந்த போதிலும் அவர்களுடைய கதி என்னவாயிற்று என்று தெரியவில்லை.
3 நாட்கள் ஆன பிறகும் வீரர்களை கண்டுபிடிக்க முடியாததால் அவர்கள் இறந்திருக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. ஆனாலும் அதுபற்றி இதுவரை அதிகாரபூர்வ தகவல்கள் ஏதும் இல்லை.
காணாமல் போன ராணுவ வீரர்கள் 15வது பிகார் காலாட் பட்டாலியனைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இதற்கிடையே லே பகுதியில் எஸ்எம்எஸ் சேவையை ஜம்மு-காஷ்மீர் அரசு மீண்டும் அனுமதித்துள்ளது. தொடங்கியுள்ளது. முன் பாதுகாப்பு காரணங்களுக்காக அப் பகுதியில் செல்போன் சேவைகள் தடை செய்யப்பட்டிருந்தன.
இப்போது வெள்ள பாதிப்பால் லே பகுதியே தத்தளிக்கும் நிலையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் உதவுவதற்காக எஸ்எம்எஸ் சேவையை அரசு அனுமதித்துள்ளது.
சீனாவிலும் ஆயிரக்கணக்கில் பலி:
இந் நிலையில் சீனாவில் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 1,300 பேருக்கும் மேற்பட்டவர்களை காணவில்லை.
அவர்கள் நிலச்சரிவில் சிக்கி இருக்க கூடும் என்று கருதப்படுகிறது.
சீனாவின் வடமேற்கு பகுதியில் கன்சூக் மாகாணத்தில் திபெத்திய தன்னாட்சிப் பகுதிக்கு உட்பட்ட கன்னான் பகுதியில் கடந்த ஒரு வாரமாக வரலாறு காணாத பேய் மழை பெய்து வருகிறது. இதில் 127 பேர் பலியாகி உள்ளனர்.












Click it and Unblock the Notifications