நெருங்கியது காங். பாதயாத்திரை-பெல்லாரியிலிருந்து ரெட்டி பிரதர்ஸ் ஓட்டம்!

கர்நாடக அரசியலை ஆட்டிப்படைத்து வரும் ரெட்டி சகோதரர் அமைச்சர்களுக்கு எதிராக அங்கு காங்கிரஸ் கட்சியினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்
ரெட்டி சகோதரர்கள் மேற்கொண்டு வரும் சட்டவிரோதமான சுரங்கத் தொழிலை ஒழிக்க வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அவர்கள் கோரி வருகின்றனர்.
ஆனால் ரெட்டி சகோதரர்களால் பிழைப்பு நடத்தி வரும் பாஜக ஆட்சியினரால் இந்தக் கோரிக்கையை ஏற்க முடியவில்லை. இந் நிலையில் எங்களை எதிர்த்து நீங்கள் பெல்லாரிக்குள் நுழைய முடியுமா என்று ரெட்டி சகோதரர்கள் காங்கிரஸ் தலைவர்களுக்கு சவால் விட்டனர்.
இதை உடனடியாக ஏற்றுக் கொண்ட காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் சித்தராமையா உடனடியாக பாதயாத்திரையைத் தொடங்கினார்.
இதில் மாநில காங்கிரஸ் தலைவர் தேஷ்பாண்டே, துணைத் தலைவர் சிவக்குமார் உள்பட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.
ரெட்டி சகோதரர்களுக்கு எதிரான காங்கிரசின் இந்த பாதயாத்திரை பெங்களூரில் தொடங்கியது. கடந்த 15 நாட்களாக நடந்த இந்த யாத்திரை தனது 350 கி.மீ. தூரத்தை நிறைவு செய்து இன்று பெல்லாரியை அடைந்தது. இதையடுத்து பெல்லாரியில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது.
இதையொட்டி பெல்லாரியில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
பெல்லாரிக்குள் காங்கிரஸ் பாதயாத்திரைக் குழுவினர் வந்த பினனர் வன்முறை வெடிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டதால் 6,000க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். கலவரத் தடுப்புப் போலீஸாரும் குவிக்கப்பட்டனர்.
வன்முறை மற்றும் கலவரம் மூளலாம் என்ற அச்சம் காரணமாக பல பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
ரெட்டி சகோதர்கள் ஓட்டம்:
காங்கிரஸ் பாதயாத்திரை பெல்லாரியை நெருங்கிய நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரெட்டி சகோதரர்கள் பெல்லாரியை விட்டு வெளியேறிவிட்டனர். அவர்களது குடும்பத்தினர் வீடுகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications