மதுரை விமான நிலையத்திற்கு இமானுவேல் பெயர் வைக்க கோரி கரூரில் ஆர்ப்பாட்டம்
கரூர்: மதுரை விமான நிலையத்திற்கு தியாகி இமானுவேல் பெயர் வைக்க கோரி கரூரில் பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கரூர் பஸ் நிலையம் அருகில் கரூர் மாவட்ட தேவேந்திரர் கூட்டமைப்பு சார்பில் சமூக உரிமைப் போராளி தியாகி இமானுவேல் பெயரை வைக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர் பாண்டியன் தலைமை தாங்கினார். அம்பேத்கார் சேவை கூட்டமைப்பு பேரவை தலைவர் பெ. கருணாகரன், தலித் விடுதலை இயக்க மாநில இளைஞரணி செயலாளர் தலித் பாண்டியன், மள்ளர் மீட்புக் கழகம் தமிழ் நெஞ்சன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் வாசுதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்
வழக்கறிஞர் பாண்டியன் பேசுகையில், மதுரை விமான நிலையத்திற்கு தியாகி இமானுவேல் பெயரைத் தான் வைக்க வேண்டும். ஆனால் மதுரை எம்.பி-யும், மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வைக்க பரிந்துரை செய்துள்ளாக தகவல் வெளியுள்ளது. அவ்வாறு நடைபெற்றால் வரும் சட்ட மன்றத் தேர்தலில் தேவேந்திர மக்கள் யாரும் திமுகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். இது தகவல் அல்ல எச்சரிக்கை என்றார்.