மணிலாவில் பஸ் சிறை பிடிப்பு-போலீஸாருடன் நடந்த சண்டையில் 8 பேர் பலி

மணிலாவில், நேற்று வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சென்ற பஸ் ஒன்றை பணிநீக்கம் செய்யப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான ரோலன்டோ மென்டோசா என்ற நபர் துப்பாக்கி முனையில் சிறை பிடித்தார். 55 வயதான மென்டோசா, போதைப்பொருள் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் போன்ற குற்றங்களுக்காக கடந்த ஆண்டு பணியில் இருந்து நீக்கப்பட்டவர்.
பஸ்சை நிறுத்தி வலுக்கட்டாயமாக லிப்ட் கேட்டு ஏறி அதை சிறை பிடித்தார் மென்டோசா. பஸ்சில் பெண்கள், குழந்தைகள் உள்பட 25 பேர் இருந்தனர். பெரும்பாலானவர்கள் ஹாங்காங்கைச் சேர்ந்தவர்கள். தாங்கள் சிறை பிடிக்கப்பட்டதை அறிந்த சுற்றுலாப் பயணிகள் பீதியடைந்தனர்.
தகவல் கிடைத்து போலீஸார், அதிரடிப்படையினர், தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை விரைந்து வந்தனர். அந்தப் பகுதி சீல் வைக்கப்பட்டு பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர்.
கையில் எம்-16 ரக துப்பாக்கியுடன் காணப்பட்ட மென்டோசா, மீண்டும் எனக்கு வேலை கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அனைவரையும் சுட்டுக் கொன்று விடுவேன் என்று மிரட்டினார் மென்டோசா.
மென்டோசாவுடன் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடந்தது. 3 மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பின்னர் 2 பெண்கள், 3 குழந்தைகள், சர்க்கரை வியாதியஸ்தர் ஒருவர், பிலிப்பைன்ஸ் சுற்றுலா கைடு, புகைப்படக்காரர் ஆகியோரை வெளியே விட்டார் மென்டோசா.
அதன் பின்னர் பலமுறை பேச்சு நடத்தியும் மென்டோசா மசியவில்லை. இதையடுத்து பஸ்சுக்குள் அதிரடியாக புகுந்து பயணிகளைக் காப்பாற்றுவது, மென்டோசாவை சுட்டுக் கொல்வது என தீர்மானிக்கப்பட்டது. அதன்படி அதிரடிப் படை போலீஸார் திடீரென பஸ்சுக்குள் பாய்ந்தனர். அவர்களை நோக்கி மென்டோசா சரமாரியாக சுட்டார். இதையடுத்து பதிலுக்கு பாதுகாப்புப் படையினரும் சுட்டனர்.
இதில் குண்டு பாய்ந்து இறந்தார் மென்டோசா. இதையடுத்து பஸ்சுக்குள் நுழைந்த போலீஸார் அங்கு 8 பயணிகள் இறந்து கிடந்ததைதப் பார்த்தனர். மென்டோசாவுக்கும், அதிரடிப்படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் இவர்கள் இறந்துள்ளனர்.
பெரும் பீதியில் உறைந்து போயிருந்த 8 பயணிகளை போலீஸார் பத்திரமாக உயிருடன் மீட்டனர். கிட்டத்தட்ட 12 மணி நேரம் இந்த கடத்தல் நாடகம் நடந்தது. இந்த சம்பவத்தால் பிலிப்பைன்ஸே அதிர்ச்சியில் மூழ்கியது.
மென்டோசாவின் சகோதரருக்கும் இந்த கடத்தல் நாடகத்தில் உடன்பாடு இருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
உயிரிழந்த அனைவரும் ஹாங்காங்கைச் சேர்ந்தவர்கள். இதையடுத்து உடல்களைக் கொண்டு வருவதற்காக ஹாங்காங் நிர்வாகம் தனி விமானத்தை அனுப்பி வைத்தது. அந்த விமானம் மூலம் பலியானவர்களின் உடல்கள் ஹாங்காங் கொண்டு வரப்பட்டன.
இந்த சம்பவம் குறித்து சீன அரசு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணையை பிலிப்பைன்ஸ் அரசு நடத்த வேண்டும் என அது கோரியுள்ளது.












Click it and Unblock the Notifications