திமுகவுடன் கூட்டணி தொடரும்-காங்கிரஸ் திட்டவட்டம்: விமர்சித்தால் நடவடிக்கை-ஆசாத் எச்சரிக்கை

திமுகவையும், அதன் ஆட்சியையும், அதன் செயல்பாடுகளையும், முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனும், கார்த்தி சிதம்பரமும் தொடர்ந்து விமர்சித்துப் பேசி வருகிறார்கள். இதில் இளங்கோவன் பட்டவர்த்தனமாக பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
இதனால் அதிருப்தி அடைந்த முதல்வர் கருணாநிதி, இளங்கோவனின் பேச்சு கூட்டணிக்கு வலிமை சேர்ப்பதை விட வலியையே கொடுக்கும் எனக் கூறியுள்ளார்.
மேலும் அதிமுக-காங்கிரஸ் கூட்டணி வரும் என்பது போல ஜெயலலிதாவும் பேசி வருகிறார். மத்திய அரசைத் தாக்குவதைக் குறைத்துக் கொண்டுவிட்ட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, திமுகவை மட்டுமே தாக்கி வருகிறார்.
அத்தோடு ஜெயலலிதாவுக்கு ஆதரவாக சில தினசரி, வாரப் பத்திரிக்கைகளும் சில பத்திரிக்கையாளர்களும் அதிமுக-காங்கிரஸ் கூட்டணி அமையப் போகிறது என்பது போல பிரமையை ஏற்படுத்தி வருகின்றன.
சமீபத்தில் சோனியா காந்தியை சந்தித்த திமுக எம்பி டி.ஆர்.பாலு, இளங்கோவனின் பேச்சுக்கள் குறித்து முதல்வர் கருணாநிதியின் அதிருப்தியைத் தெரிவித்தார். ஆனாலும் காங்கிரஸ் மேலிடம் அமைதி காத்து வந்தது.
இந் நிலையில் இன்று திமுக எம்.பிக்கள் கூட்டத்தை முதல்வர் கருணாநிதி கூட்டினார். இதில் தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்றும், மத்திய அரசுக்கு நெருக்கடி தரும் விதத்தில் சில முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்பட்டது.
இதையடுத்து தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரான குலாம் நபி ஆசாத் வாய் திறந்துள்ளார். அவர் கூறுகையில்,
திமுகவுடன் தேசிய அளவிலும், மாநில அளவிலும் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது. இது தொடரும். கூடடணிக்கு எதிராக பேசுவதற்கு எந்த தனி நபருக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் மேலிடம் அனுமதியோ, அங்கீகாரமோ அளிக்கவில்லை.
யாருக்காவது ஏதாவது பிரச்சினை என்றால் அதை உரிய இடத்தில், உரிய நேரத்தில் எழுப்ப வேண்டும். மாறாக பொது இடங்களிலோ அல்லது பத்திரிக்கை, டிவி மூலமாகவோ எழுப்பினால் அதை பொறுத்துக் கொள்ள முடியாது.
எனவே இதுபோன்று கூட்டணிக்கு எதிரான பேச்சுக்கள், அறிக்கைகளை கட்சியினர் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கூட்டணிக்கு எதிரான கருத்துக்கள் கட்சி விரோத நடவடிக்கையாக பார்க்கப்படும்.
கட்சி மேலிடத்தைத் தவிர வேறு யாரும் கூட்டணி குறித்துப் பேசக் கூடாது, பேச முடியாது என்றார் ஆசாத்.
யாருடைய பெயரையும் ஆசாத் குறிப்பிடவில்லை என்றாலும் கூட அவரது எச்சரிக்கை, ஈவிகேஎஸ் இளங்கோவனுக்குத்தான் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications