லெனினை கைது செய்ய கோரும் நித்யானந்தா ஆதரவாளர்கள்!
பெங்களூர் பிடதியில் ஆசிரமம் அமைத்து நடத்தி வருபவர் நித்யானந்தா. இவரும் நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கையில் இருந்த காட்சிகளை முழுவதுமாக படம் பிடித்து அதை வீடியோவாக வெளியிட்டார் லெனின். போலீசாருக்கும் அந்த சிடிக்களை அவர் கொடுத்தார்.
இது தொடர்பாக நித்யானந்தா கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலையானார். தற்போது அவர் பிடதியில் உள்ள ஆசிரமத்தில் தங்கி வழக்கமான பூஜைகளை செய்து வருகிறார்.
இந்த நிலையில் நித்யானந்தா சாமியாரின் சீடர்கள் நூற்றுக்கணக்கானோர் பெங்களூர் ராம்நகரில் உள்ள காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது முன்னாள் சீடர் லெனின் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்கள். அப்போது அங்கு எஸ்பி இல்லை. இதைத் தொடர்ந்து அங்கு மனு கொடுத்து விட்டு திரும்பினார்கள்.
இதற்கிடையே, பிடதி ஆசிரமம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "நித்யானந்தா மீது பொய் புகார் கூறிய லெனின் மீது போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 2 முறை சீடர்கள் கோரிக்கை விடுத்தனர். தனிப்பட்ட முறையிலும் லெனின் மீது புகார் கொடுக்கப்பட்டது. அதில் அவர் தொடர்ந்து ஆசிரமம் பற்றி தவறான தகவல்களை பரப்பி வருகிறார் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தனர்.
நேற்று மீண்டும் ஆர்ப்பாட்டம் நடந்தபோது இது பற்றி பிடதி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யுமாறு போலீஸ் எஸ்பி அலுவலகத்தில் கூறினர்..." என்று கூறப்பட்டுள்ளது.