கேரளாவில் வெளி மாநில லாட்டரிகளுக்குத் தடை
கொல்லம்: வெளிமாநில லாட்டரிக்களுக்கு கேரள அரசு தடை விதித்துள்ளது.
கேரள மாநிலத்தில் கேரள அரசு லாட்டரிகள் தவிர பூட்டான், சிக்கிம் உள்ளி்ட்ட பல்வேறு மாநில லாட்டரிகளும் விற்கப்படுகிறது. தமிழக-கேரள எல்லையில் மட்டும் தலா 50 லாட்டரி கடைகள் இயங்கி வருகின்றன.
மேலும், மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாட்டரி கடைகள் இயங்கி வருகின்றன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களும், கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களும் வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் லாட்டரி வியாபாரத்தின் முக்கிய புள்ளிகள் சிலர் கேரள அரசுக்கு உரிய வரி செலுத்தவில்லை என்பதால் கடந்த மாதம் முதல் இம்மாநில அரசு அனைத்து வெளிமாநில லாட்டரிகளுக்கும் தடை விதித்தது.
இதில் கேரள அரசின் வின், வின் பம்பர் லாட்டரியும், திருவோணம் சிறப்பு பரிசு சீட்டையும் தவிர மற்ற அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் எல்லைகளில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.
இதனால் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். கேரளாவில் லாட்டரி தடை செய்யப்பட்டுள்ளதால் எல்லைகளில் உள்ள போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.