தெலுங்கானாவில் பந்த்-தெலுங்கானா ராஸ்டிரிய சமிதி ஆதரவு-பஸ்கள் மீது தாக்குதல்
ஹைதராபாத்: ஏபிபிஎஸ்சி தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் தெலுங்கானா பந்த் நடத்தினர். அப்போது போராட்டக்காரர்கள் அரசுப் பேருந்துகளை இலக்காக வைத்து கற்களை வீசித் தாக்கினர்.
உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய இந்த ஒரு நாள் பந்திற்கு தெலுங்கானா ராஸ்டிரிய சமிதி கட்சி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.
காலை 9.30 மணிக்கு பந்த் தொடங்கியது. போராட்டக்காரர்களும், மாணவர்களும் ஆந்திர பிரதேச அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளை குறி வைத்தனர். குறிப்பாக ஹைதராபாத், கரிம் நகர் மற்றும் தெலுங்கானாவில் உள்ள மற்ற நகரங்களில் ஓடும் பேருந்துகளை சேதப்படுத்தினர்.
கரிம் நகரில் ஒரு பேருந்து தீ வைத்து எரிக்கப்பட்டது. மற்ற பகுதிகளில் பேருந்துகளின் மீது கற்கள் வீசப்பட்டன.
இன்று நடக்கும் ஆந்திர பிரதேஷ் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வை எதிர்த்து தான் இந்த பந்தை மாணவர்கள் நடத்தினர். பந்த்தையொட்டி ஹைதராபாத் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.