இலங்கை-இந்திய வீரர்கள் நினைவிடத்தில் ராணுவத் தளபதி அஞ்சலி
கொழும்பு : அமைதி காக்கும் படை என்ற பெயரில் இலங்கைக்குச் சென்று விடுதலைப் புலிகளுடன் மோதி உயிர் நீத்த இந்திய ராணுவத்தினர் நினைவாக அமைக்கப்பட்டிருக்கும் போர் வீரர்கள் நினைவிடத்தில் இந்திய ராணுவத் தலைமைத் தளபதி வி.கே.சிங் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இந்திய அமைதி காக்கும் படை இலங்கைக்குச் சென்றபோது அதில் வி.கே.சிங்கும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1987ம் ஆண்டு முதல் 89 வரை இந்தியப் படையினர் இலங்கையில் இருந்தனர். சமாதானத்திற்காக சென்ற இந்தியப் படையினர் விடுதலைப் புலிகளுடன் மோதலில் இறங்கினர். இதில் இந்தியத் தரப்புக்கு பெரும் சேதம் ஏற்பட்டது. 1165 வீரர்களை இழந்தது இந்தியா.
அவர்களின் நினைவாக கொழும்பில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. அங்குதான் வி.கே.சிங் சென்றுஅஞ்சலி செலுத்தினார். இந்த நினைவிடம் அமைக்கப்பட்ட பின்னர் அஞ்சலி செலுத்திய முதல் இந்தியத் தளபதி வி.கே.சிங்தான்.
இலங்கைக்கு 5 நாள் பயணமாக வந்த வி.கே.சிங், வவுனியாவுக்கும் சென்று விடுதலைப் புலிகளுக்கும், இலங்கைப் படையினருக்கும் இடையே போர் நடந்த பகுதிகளையும் பார்வையிட்டார்.
தனது இலங்கை பயணத்தின்போது ராஜபக்சே, இலங்கை பிரதமர் ஜெயரத்னே, கோத்தபயா ராஜபக்சே, வெளியுறவு அமைச்சர் பெரீஸ் ஆகியோரையும் சந்தித்துப் பேசினார் சிங்.












Click it and Unblock the Notifications