6வது முறையல்ல, என்றென்றும் கருணாநிதியே முதல்வர்-பொன்முடி
திருச்சி: திருச்சியில் கூடியிருக்கிற கூட்டத்தைப் பார்த்தால் 6வது முறையாக அல்ல, என்றென்றும் கருணாநிதியே முதல்வராக நீடிப்பார் என்று கூறினார் அமைச்சர் பொன்முடி.
திருச்சியில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் பொன்முடி பேசியதாவது...
திருச்சியில் இன்று நடக்கும் இந்தக் கூட்டத்தைப் பார்த்தால் ஆறாவது முறையல்ல, என்றென்றும் கலைஞர்தான் முதல்வர் என்பதை நிரூபிக்கும் வகையில் இருக்கிறது. இதை பொறுக்க முடியாத சில பேர்தான் அவ்வப்போது மலையிலே இருந்து கீழே வருகிறார்கள்.
மேலேயேறுவதும்-கீழே இறங்குவதும்:
கொஞ்ச நேரம் உங்களை எல்லாம் பார்த்துவிட்டு மீண்டும் மலையேறுகிறார்கள். அவர்களுக்கு மேலேயேறுவதும், கீழே இறங்குவதும் அந்தக் காலத்திலிருந்தே தொழில்.
இப்போது அந்த அம்மையார் அரசியல் பேசுவதை விட்டுவிட்டு, கலைஞருடைய குடும்பத்தையும், கலைஞரைப் பற்றியும் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதையே தன்னுடைய அரசியலாக்கிக் கொண்டிருக்கிறார்.
ஜெயலலிதா அறிக்கை விடுகிறார். சேலத்திலே சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம். நான் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன். யார் ஜெயலலிதா பேசலாமா? மனசாட்சி உள்ளவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டாமா?
கோவையில் இருந்து சுற்றுலா சென்ற மாணவிகளை தடுத்து நிறுத்தி, தனக்கு நீதிமன்றம் தீர்ப்பளித்தற்காக, குற்றவாளி என்று தீர்ப்பளித்ததற்காக அந்த தாக்குதலை நடத்தி ஏவிவிட்ட ஜெயலலிதா, மூன்று மாணவிகளை கொலை செய்வதற்கு காரணமான ஜெயலலிதா, இன்று மாணவர்கள் தாக்கப்படுகிறார்கள், அதைப் பார்த்து நான் சும்மா இருப்பேனா என்கிறார்.
நீலிக் கண்ணீர் வடிக்கிறார்:
அரசு ஊழியர்கள், எஸ்மா டெஸ்மா சட்டத்தைப் பார்த்தவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டாமா? ஜெயலலிதா நீலிக் கண்ணீர் வடிக்கிறார் சத்துணவு ஊழியர்களை பார்த்து. சத்துணவு ஊழியர்களே எண்ணிப் பாருங்கள். கையில் பச்சை குத்தியவர்கள் யார் என்று பார்த்து, அவர்களுக்கு வேலை கொடுத்தார்கள். ஆனால் கலைஞர் அந்த அதிமுகவினரையும் நிரந்தரம் செய்தார்.
ஆனால் ஜெயலலிதா மக்கள் நலப்பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பினார். சாலை பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பினார். ஜெயலலிதாவுக்கு இருக்கிற துரோக மனப்பான்மை தமிழகத்தில் வேறு எந்த அரசியல் கட்சியினருக்காவது இருக்கிறதா? என்றார் பொன்முடி.