32 பேருக்கு ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் உதவித் தொகை அளித்தார் கருணாநிதி
சென்னை: முதல்வர் கருணாநிதி ஏழை, எளியோருக்கு மருத்துவம் செய்துகொள்ளவும் மற்றும் கல்வி கற்கவும் 32 பேருக்கு ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் நிதியுதவி அளித்தார்.
இது குறித்து தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
கருணாநிதி தன் பெயரில் துவங்கப்பட்ட கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்கு தன் சொந்த பணத்தில் இருந்து ரூ. 5 கோடி அளித்தார். இந்தத் தொகை வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டது.
இதில் ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் வட்டி ஏழை மக்களுக்கு நிதியுதவியாகக் கொடுக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் கடந்த 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2007-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை நிதியுதவி அளிக்கப்பட்டது.
வைப்பு நிதியில் போடப்பட்ட ரூ.5 கோடியில் இருந்து ரூ.1 கோடியை தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கத்திற்கு அளிக்குமாறு கருணாநிதி உத்தரவிட்டார். அதன்படி அளிக்கப்பட்டத் தொகை போக எஞ்சிய ரூ. 4 கோடிக்கு கிடைக்கும் வட்டித் தொகை எளியோருக்கு வழங்கப்படுகிறது. இது கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் தற்போது வரை அளிக்கப்பட்டுள்ள மொத்த தொகை ரூ.1 கோடியே 72 லட்சத்து 65 ஆயிரம் ஆகும். கடந்த மாதம் ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் வட்டியாகக் கிடைத்தது. இதை கருணாநிதி 32 பேருக்கு மருத்துவம் மற்றும் கல்விச் செலவிற்கு நிதியுதவியாக அளித்தார். இதைப் பெறுவதற்காக மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சென்னைக்கு வந்து செல்லும் சிரமத்தைக் குறைக்க அவர்களுக்கு காசோலை அனுப்பப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications