சிவகாசி பாட்டாசுக்கு அடி மேல் அடி-ஆந்திராவிலும் தடை: 70 லாரி பட்டாசு திரும்பி வந்தது

இதனால் சிவகாசியில் இருந்து கொண்டு செல்லப்பட்டு ஆந்திர மாநில குடோன்களில் இருந்த 70 லாரி பட்டாசுகளை மீண்டும் சிவகாசிக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் 200 லாரி பட்டாசுகள் சிவகாசிக்கு திரும்பி வரத் தயாராக உள்ளன.
சிவகாசியில் கடந்த மாதம் 10ம் தேதி ஏற்பட்ட விபத்தில் 8 அதிகாரிகள் பலியானதைத் தொடர்ந்து சிறிய நிறுவனங்கள் பட்டாசு தயாரிக்க முடியாமல் தவிக்கின்றன. கடந்த 1 மாதத்தில் தொழிற்சாலை ஆய்வகத்துறை நடத்திய ரெய்டுகளில் 15 பட்டாசு ஆலைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் வட மாநிலங்களில் பெய்த கடும் மழையால் சிவகாசியில் பட்டாசு விற்பனை மந்தமாகியுள்ளது. இதுதவிர டெல்லியில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிக்காக சிவகாசி பட்டாசுகள் தயாரானாலும், அவற்றை அக்டோபர் 14ம் தேதி வரை பஞ்சாப், டெல்லி, ஹரியானா மாநிலங்களில் இருப்பு வைக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இதனால் சிவகாசி பகுதியில் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த மாதம் ஆந்திராவில் தாடே பள்ளிகூடம் என்ற இடத்தில் அனுமதியில்லாமல் வீட்டில் பட்டாசு தயாரித்தபோது அவை வெடித்து 9 பேர் பலியாகினர். மேலும் தனுக் என்னுமிடத்தில் வீட்டில் தயாரித்த பட்டாசு வெடித்து 4 பேர் பலியாகினர். அங்கிருந்த மூலப்பொருட்களை எடுத்து சேகரித்து வைத்திருந்த தனுக் காவல் நிலையம் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் தரைமட்டமானது.
வெடி விபத்துகளில் கடந்த 1 மாதத்தில் மட்டும் 13 பேர் பலி, 30 பேர் காயம் அடைந்தனர். இதனால் ஆந்திர அரசு பல்வேறு கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
தற்போது ஆந்திர அரசின் கெடுபிடியால் 7 பட்டாசு ஆலைகளுக்கு சீ்ல் வைத்தனர். அதனால் ஆந்திர மாநில வியாபாரிகள் இருப்பு வைத்திருந்த பட்டாசுகளைத் திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கின்றனர். இதுவரை ஆந்திராவில் இருந்து 70 லாரி பட்டாசுகள் சிவகாசிக்கு திரும்பியுள்ளன.
இன்னும் 200 லாரி பட்டாசுகள் திரும்பக் காத்திருக்கின்றன. ஏற்கனவே பட்டாசு ஆர்டர் கொடுத்த ஆந்திர வியாபாரிகள் தீபாவளிக்கு 1 வாரம் முன்பு கொடுத்தால் போதும் எனக் கூறி விட்டனர்.
வட மாநிலங்களுக்கு பட்டாசுகளை அனுப்ப முடியாமல் காத்திருக்கும் சிவகாசி பட்டாசு ஆலை அதிபர்கள் ஆந்திராவிலும் ஏற்பட்ட தடையால் இடிந்து போயுள்ளனர்.












Click it and Unblock the Notifications