பஞ்சு ஏற்றுமதியை தடுக்க கோரி மு.க. ஸ்டாலினிடம் சைமா கோரிக்கை
திருப்பூர்: பின்னலாடை தொழிலையும், அதன் மூலம் பயன் பெறும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நலன் கருதியும், பஞ்சு, நூல் ஏற்றுமதியை தடுக்க கோரி தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் சைமா கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க (சைமா) தலைவர் ஈஸ்வரன், துணை முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது
நூல் விலை வரலாறு காணாதஅளவுக்கு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஜவுளித்துறை தடுமாற்றம் கண்டுள்ளது.
கடந்தாண்டு, ஒரு கேண்டி 24 ஆயிரத்துக்கும், 40ம் நம்பர் நூல் கிலோ 135 ரூபாய்க்கும் விற்றது. தற்போது, 39 ஆயிரம் ரூபாயாக விற்பனையாகின்றது.
ஜவுளித்துறையினர் பலமுறை கோரிக்கை விடுத்தும், மத்திய அரசு, பஞ்சு, நூல் ஏற்றுமதியை தடுக்கவில்லை. மேலும், பஞ்சு ஏற்றுமதி செய்தால், விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என மத்திய அரசு கூறுகிறது.
ஆனால், விவசாயிகளுக்கான விலையை அரசே நிர்ணயம் செய்யலாம். அவ்வாறு செய்யாமல், ஏற்றுமதிக்கு அனுமதிப்பது தொழிலுக்கு ஆபத்தாகவே முடியும்.
மூலப்பொருள் ஏற்றுமதியால், நாட்டின் அன்னிய செலாவணி வருவாய் பெருமளவு குறைகிறது.
நாம் ஏற்றுமதி செய்யும் பஞ்சு, போட்டி நாடுகளான சீனா, பாகிஸ்தான் நாடுகளில் ஆடைகளாக மாறி, நமக்கே பெரும் போட்டியாக அமைந்துவிடும்.
எனவே, பின்னலாடை தொழில் மற்றும் அதை நம்பி வாழும் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நலன் கருதி, பஞ்சு, நூல் ஏற்றுமதியை பரிசீலனை செய்ய வேண்டும். தமிழக ஜவுளித்துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவை மத்திய அரசுக்கு தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.