அமைச்சரவையிலிருந்து நீக்கினால் தற்கொலை செய்வேன்-பாஜக அமைச்சர் மிரட்டல்
கடந்த 2008ம் ஆண்டு மே மாதம் எதியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சியமைத்தபோது அவரது ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்த சுயேச்சை எம்.எல்.ஏதான் இந்த குளிஹட்டி சேகர். ஆதரவு தெரிவித்ததற்குப் பரிகாரமாக அமைச்சர் பதவியைக் கொடுத்தது பாஜக.
இப்போது இவர் உள்பட சிலரை நீக்கி விட்டு அமைச்சரவையை மாற்ற எதியூரப்பா தீர்மானித்துள்ளார். இதற்காக டெல்லி சென்றுள்ளார். இதனால்தான் இப்படி மிரட்டியுள்ளார் குளிஹட்டி.
இதுகுறித்து அவர் கூறுகையில், என்னை நீக்கினால் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் நிச்சயம் நான் தற்கொலை செய்து கொள்வேன். கட்சிக் கொடியைத்தான் என் மீது போர்த்த வேண்டியிருக்கும் என்று பேசியுள்ளார்.
இதற்கிடையே, பேலூர் எம்.எல்.ஏ கோபாலகிருஷ்ணா தனது ஆதரவாளர்களான 20 எம்.எல்.ஏக்களுடன் ராஜினாமா செய்யப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பாஜகவுக்கு மேலும் ஒரு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வருவாய்த்துறை அமைச்சர் ரேணுகாச்சார்யா தலைமையில் அனைவரும் கூண்டோடு விலகப் போகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.
எதியூரப்பாவுக்கு எதிரானவர்களில் கோபாலகிருஷ்ணாவும் ஒருவர். இவர் நூலகத்துறை அமைச்சர் சிவண்ண கெளட் நாயக்குக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.
மேலும், மாநில தலைவர் ஈஸ்வரப்பாவையும் கடுமையாக அவர் சாடியுள்ளார். ஈடிகா சமூகத்திற்காக நான் குரல் கொடுத்து வருகிறேன். ஆனால் என்னையும், எனது சமூகத்தையும் கேலி செய்துள்ளார் ஈஸ்வரப்பா. இருந்தால் இருங்கள், போனால் போங்கள் என்று கூறியுள்ளார். அதனால்தான் போகப் போகிறோம் என்றார் கோபமாக.
எதியூரப்பா டெல்லியிலிருந்து வரும்போது ஏகப்பட்ட குழப்பங்கள் அவரை வரவேற்கும் என்று தெரிகிறது.