என்ஜின் கோளாறு-கொல்லம் ரயில் நடுவழியில் நின்றது
மார்த்தாண்டம்: என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கொல்லம் பயணிகள் ரயில் பாதியிலேயே நின்றது.
மதுரையில் இருந்து கொல்லம் செல்லும் பயணிகள் ரயில் நேற்று முன்தினம் வழக்கம்போல் காலை 5.20 மணிக்கு குழித்துறை (மார்த்தாண்டம்) ரயில் நிலையம் வந்தது. சிறிது நேரத்திற்குப் பின் அங்கிருந்து மீண்டும் புறப்பட்டது. குழித்துறை மேற்கு ரயில் நிலையம் (கழுவன்திட்டை) பாலம் பகுதியில் வரும்போது என்ஜினில் திடீரென்று கோளாறு ஏற்பட்டதால் நடுவழியில் நின்றது.
இதையடுத்து திருவனந்தபுரத்தில் இருந்து மாற்று இன்ஜின் கொண்டு வந்து பொருத்தியதை அடுத்து காலை 7.40 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. திருவனந்தபுரம் சென்றதும் அங்கு பழுதான என்ஜின் மாற்றப்பட்டு அங்கு இருந்து கொல்லம் புறப்பட்டுச் சென்றது.
இதனால் பயணிகள் 2 மணி நேரம் அவதிப்பட்டனர். திடீரென என்ஜின் பழுதானதால் நாகர்கோவில்-திருவனந்தபுரம் செல்லும் 2 பயணிகள் ரயில், கன்னியாகுமரி-மும்பை செல்லும எக்ஸ்பிரஸ் ரயில், நெல்லை-ஹப்பா செல்லும் ரயில் ஆகிய 4 ரயில்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. நெல்லை-ஹப்பா ரயில் மார்த்தாண்டத்தில் 20 நிமிடம் நின்று சென்றது.