ஐசிசியின் சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து ஆசிப், ஆமிர் அப்பீல்
கராச்சி: கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக ஐசிசி விதித்துள்ள சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து பாகிஸ்தான் கிரிக்கெட் பந்து வீச்சாளர்கள் முகம்மது ஆசிப், முகம்மது ஆமிர் ஆகியோர் அப்பீல் செய்துள்ளனர்.
தங்களது அப்பீல் மனுவை ஐசிசியின் ஊழல் தடுப்பு பிரிவிடம் சமர்ப்பித்துள்ளனர். துபாயில் உள்ள ஐசிசி தலைமையகத்திற்கு இந்த அப்பீல் மனுக்களை இருவரும் தங்களது வக்கீல்கள் மூலம் அனுப்பி வைத்துள்ளனராம்.
சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், அப்பீல் மனுக்களை விரைவில் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இரு வீரர்களும் சமர்ப்பித்துள்ள தனித் தனி மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சஸ்பெண்ட் ஆகியுள்ள மற்றொருவரான பாகிஸ்தான் கேப்டன் சல்மான் பட் ஏற்கனவே தனது அப்பீல் மனுவை 3 நாட்களுக்கு முன்பு அனுப்பி வைத்துள்ளார்.
இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் போட்டியின்போது ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டு சிக்கினர் இந்த மூவரும். இதையடுத்து ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் விசாரணை நடத்தினர். மூவர் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மூன்று பேரையும் செப்டம்பர் மாதம் ஐசிசி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.