ரூ 470 கோடி மோசடி: லலித் மோடி பாஸ்போர்ட் முடக்க அமலாக்கப் பிரிவு உத்தரவு!
மும்பை: ரூ 470 கோடி ஊழலுக்கு காரணமான லலித் மோடி மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளதால், அவரது பாஸ்போர்ட்டை முடக்குமாறு அமலாக்கப் பிரிவு பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
ஐ.பி.எல். நிதி முறைகேடு தொடர்பாக அதன் தலைவர் பதவியில் இருந்து லலித்மோடி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதோடு கிரிக்கெட் வாரிய துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
ஐ.பி.எல். போட்டியில் டெலிவிஷன் உரிமம் வழங்கியது, இலவச வர்த்தக விளம்பரம், பாதுகாப்பு ஏற்பாடு ஆகியவற்றில் லலித் மோடி முறைகேடு செய்ததாக புகார் கூறப்பட்டது. அவர் மீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) ரூ.470 கோடி மோசடி புகார் கொடுத்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஐ.பி.எல். போட்டிகளின்போது லலித்மோடி அன்னிய செலாவணி மோசடியிலும் ஈடுபட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்க பிரிவு அவருக்கு சம்மன் அனுப்பி இருந்தது.
வெளிநாட்டில் இருக்கும் அவர் விசாரணைக்கு ஆஜராக மறுத்துவிட்டார். இதைத் தொடர்நது அவர் எந்த நேரத்திலும் கைது செய்யும் நோட்டீசை அமலாக்க பிரிவு கடந்த வாரம் பிறப்பித்தது.
இந்த நிலையில் லலித் மோடிக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவரது பாஸ்போர்ட்டை ரத்து செய்யுமாறு மும்பையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு அமலாக்க பிரிவினர் கடிதம் எழுதியுள்ளனர். அவரது வெளிநாட்டுப் பயணங்களுக்கு எதிராக ப்ளூ அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை போலீஸில் மோடி மீது வழக்கு:
முன்னதாக, ஐபிஎல் போட்டிகள் மூலம் ரூ. 470 கோடி அளவுக்கு முறைகேடு செய்துள்ளார் என்று லலித் மோடி மீது இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் சீனிவாசன் சென்னை போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து விசாரணைக்கு சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
நேற்று கமிஷனர் ராஜேந்திரனை சீனிவாசன் நேரில்சந்தித்து மோடி மீது புகார் கொடுத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ஐ.பி.எல். போட்டியின் முன்னாள் ஆணையர் லலித்மோடி பல்வேறு முறைகேடுகள் செய்து இருப்பது தெரியவந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த கிரிக்கெட் வாரிய பொதுக்குழு கூட்டத்தில் லலித்மோடி செய்துள்ள மோசடிகள் குறித்து போலீசில் புகார் கொடுக்க ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளேன். லலித்மோடி மீது கூறப்பட்டுள்ள புகார்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க உரிய முகாந்திரங்கள் உள்ளது. கமிஷனர் தகுந்த நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன் என்றார்.
இந்த விவகாரம் குறித்து கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து செய்தியாளர்கள் கேட்டபோது,
இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் என்.சீனிவாசன் என்னிடம் சுமார் 25 பக்கங்கள் கொண்ட புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் ஐ.பி.எல். முன்னாள் கமிஷனர் லலித்மோடி மற்றும் 6 பேர் மீது 3 வகையான புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.470 கோடி அளவுக்கு அவர் முறைகேடு செய்துள்ளதாக புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. டெலிவிஷன் ஒளிபரப்பு உரிமம் வழங்கியதில் ரூ.425 கோடி அளவுக்கும், வீரர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்ததில் ரூ.16 கோடி அளவுக்கும், வர்த்தக விளம்பரம் செய்ததில் ரூ.29 கோடி அளவுக்கும் முறைகேடு செய்து இருப்பதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியம் மும்பையில் இருந்தாலும் அது சென்னையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் என்னிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. முறையான விசாரணை நடத்தப்படும்.
இந்த புகார் மனு மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்துவார்கள். இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் 120பி, 420 உள்பட 8 பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாங்கள் விசாரணை நடத்தி என்னென்ன சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வோம்.
சீனிவாசனின் செல்போன் எண்ணில் இருந்து சில மிரட்டல் எஸ்.எம்.எஸ். தகவல்கள் ஐ.பி.எல். அணி உரிமையாளர்கள் உள்பட சிலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. சீனிவாசனின் செல்போன் எண்ணை தவறாக பயன்படுத்தி இந்த மிரட்டல் தகவல்கள் அனுப்பப்பட்டு இருப்பதாகவும், சீனிவாசனுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்றும் இவ்வாறு மிரட்டல் தகவல்கள் அனுப்பியது யார்? என்று கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனியாக ஒரு புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த புகாரின் மீது மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் தடுப்புப் பிரிவு போலீசார் தனியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள் என்றார் ராஜேந்திரன்.












Click it and Unblock the Notifications