எதியூரப்பாவை மட்டுமே எதிர்க்கிறோம், மேலிடத்துடன் பேசத் தயார்-பாஜக அதிருப்தி எம்எல்ஏக்கள்

பாஜக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் திடீரென செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பாலச்சந்திர ஜார்க்கி என்பவர் கூறுகையில், எங்களது நிலையிலிருந்து நாங்கள் மாறவில்லை. நல்லது நடக்க வேண்டும் என்றே விரும்புகிறோம்.
எதியூரப்பாவை எதிர்த்து மட்டுமே போராடி வருகிறோம். பாஜகவிலிருந்து நாங்கள் விலகவில்லை. தலைமையை நாங்கள் எதிர்க்கவில்லை. கர்நாடக பாஜக தலைமையை மட்டுமே எதிர்த்து வருகிறோம்.
மேலிடத்துடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராகவே உள்ளோம். பாஜகவிலிருந்து நாங்கள் யாரும் விலகவில்லை. நாங்கள் யாருக்கும் எதிரியும் அல்ல என்றார்.
அனந்த் அஸ்னோடிகர் கூறுகையில், எங்களது கோரிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. பாஜகவை விட்டு நாங்கள் விலகவில்லை. நீதித்துறை மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. கோர்ட் தீர்ப்பு வரும் வரை காத்திருப்போம். எதியூரப்பா அரசில் லஞ்ச லாவண்யம் அதிகரித்து விட்டது.
எங்களை சிறை வைத்துள்ளதாக கூறுவதில் உண்மை இல்லை. நாங்கள் சுதந்திரமாகவே இருக்கிறோம் என்றார் ஆனந்த்.
இன்றும் உயர்நீதிமன்றத்தில் விசாரணை:
இதற்கிடையே, 16 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கை கர்நாடக உயர்நீதிமன்றத்தின் 3வது நீதிபதி இன்றும் தொடர்ந்து விசாரிக்கிறார்.












Click it and Unblock the Notifications