கர்நாடக சட்டசபையிலிருந்து மேலும் ஒரு காங். எம்.எல்.ஏ. விலகல்
பெங்களூர்: கர்நாடகத்தில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த 2 நாட்களில் ராஜினாமா செய்யும் 2வது காங்கிரஸ் எம்.எல்.ஏ இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்டாக ராஜினாமா செய்தவர் பெயர் நாராயணசாமி. இவர் கோலார் மாவட்டம் பங்காருப்பேட்டை எம்.எல்.ஏ ஆவார். இவர் சபாநாயகர் போபய்யாவை நேரில் சந்தித்து தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தைக் கொடுத்தார். அதை போபய்யாவும் உடனடியாக ஏற்றுக் கொண்டு விட்டார்.
2வது நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி பெற்ற பின்னர் பதவி விலகும் 3வது எதிர்க்கட்சி எம்.எல்.ஏ இவர். இதற்கு முன்பு மதச்சார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்த அஸ்வத் ராஜினாமா செய்திருந்தார். பின்னர் ஜகலூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ ராமச்சந்திரா விலகினார்.
இதன் மூலம் காங்கிரஸின் பலம் தற்போது 73 என்பதிலிருந்து 71 ஆக குறைந்து விட்டது. கெளடா கட்சியின் பலம் 28லிருந்து 27 ஆக சுருங்கி விட்டது.
ஏற்கனவே 11 பாஜக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் உள்பட 16 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.