மருத்துவ கல்லூரியில் ராகிங்-மாணவி தற்கொலை முயற்சி:3 மாணவிகள் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நர்சிங் மாணவி ஒருவர் இன்று காலை ராகிங் கொடுமையால் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடு்த்து அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் முத்துசெல்வி (20). இவர் தூத்துக்குடியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை விடுதியில் தங்கி 2-ம் ஆண்டு நர்சிங் படித்து வருகிறார்.
இன்று காலை 7.30 மணி அளவில் அவர் தனது அறையில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்த சகமாணவிகள் உடனடியாக மருத்துவமனை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து மாணவியை மீட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு அவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட உதவி காவல்துறை கண்காணிப்பாளர் சோனல் சந்திரா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
முதல்கட்ட விசாரணையில் முத்துசெல்வியை அவருடன் படிக்கும் சீனியர் மாணவிகள் சிலர் ராகி்ங் செய்ததாகவும், இதனால் மனமுடைந்த அவர் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு மயங்கி விழுந்ததும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து ராகிங் செய்த கனகவல்லி (20), ஜெயராதா (20), ரேவதி (20) ஆகிய மூன்று மாணவிகளும் கைது செய்யப்பட்டனர்.தென்பாகம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவி தற்கொலைக்கு முயன்றது குறித்து மருத்துவமனை அதிகாரிகள் கூறும்போது இது ராகிங் கொடுமையால் நடந்ததாக தெரியவில்லை. ஜூனியர் மாணவியர்களிடையே ஏற்பட்ட ஈகோ பிரச்சனை காரணமாக நடந்துள்ளதாக தெரிகிறது. எனினும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.