காஷ்மீருக்குள் ஊடுறுவக் காத்திருக்கும் 80 பாக். தீவிரவாதிகள்
ஸ்ரீநகர்: அடுத்த பத்து நாட்களுக்குள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குள் ஊடுறுவ 80 அதி தீவிர தீவிரவாதிகள் காத்திருப்பதாக ஜம்மு காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது.
அதிபர் பராக் ஒபாமா வருகையின்போது தீவிரவாதிகள் நாச வேலையில் ஈடுபடலாம் என்று மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. இந்தநிலையில், இதுகுறித்து விரிவான தகவல் வெளியாகியுள்ளது.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதி வழியாக 80 தீவிரவாதிகள் அதி நவீன ஆயுதங்களுடன் ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுறுவக் காத்திருப்பதாக காஷ்மீர் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஸ் இ முகம்மது, அல் பாதர் உள்ளிட்ட தீவிரவாத பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது உள்ளே நுழைந்து விட இவர்கள் காத்துள்ளனராம்.
அடுத்த பத்து நாட்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அதிபர் ஒபாமாவின் இந்திய வருகையின்போது அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்துடன் இவர்கள் ஊடுறுவக் காத்துள்ளனர் என்றார்.
அதிபர் ஒபாமா நவம்பர் 6ம் தேதி மூன்று நாள் பயணமாக இந்தியா வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் அதிபர் இந்தியாவுக்கு வரும்போது தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதை பாக். தீவிரவாதிகள் ஒரு வழக்கமாக மாற்றியுள்ளனர்.
கடந்த 2000மாவது ஆண்டு மார்ச் 19-20 ஆகிய நாட்களில் அப்போதைய அதிபர் கிளிண்டன் இந்தியாவுக்கு வந்திருந்தார். அந்த சமயத்தில், தெற்கு காஷ்மீரில் புகுந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாத முஸ்ஸமில் தலைமையிலான தீவிரவாதிகள் 36 சீக்கியர்களை கொடூரமாக படுகொலை செய்தனர் என்பது நினைவிருக்கலாம். இந்த முஸ்ஸமில் மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்திலும் தொடர்பு கொண்டவன் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது 80 தீவிரவாதிகள் ஊடுறுவத் தயாராக இருப்பதாக வெளியாகியுள்ள தகவல்களைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதிகள் முழுவதும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications