தீபாவளி சிறப்பு விற்பனை-ரூ. 300 கோடிக்கு மது விற்க டாஸ்மாக் இலக்கு

பண்டிகைக் காலங்களில் 'தண்ணி' அடித்து அதைக் கொண்டாடுவது தமிழக குடிகாரர்களின் வழக்கம். குறிப்பாக தீபாவளி பண்டிகையின்போது மது விற்பனை ஏகமாக இருக்கும். அதேபோல புத்தாண்டு உள்ளிட்ட நாட்களின்போதும் மது விற்பனை தடபுடலாக இருக்கும்.
கடந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையின்போது டாஸ்மாக் கடைகள் மூலம் ரூ. 250 கோடிக்கு மது விற்பனையானது. இது அப்போது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட ரூ. 50 கோடி அதிகமாகும்.
இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையையொட்டி குடிகாரர்களுக்கு எந்தவித மனக் கசப்பும் வந்து விடாத வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை டாஸ்மாக் நிர்வாகம் செய்துள்ளதாம்.
எந்தக் கடையிலும் சரக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில், ஏற்பாடுகள் பலமாக செய்யப்பட்டு வருகின்றனவாம். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 லாரிகளை தயார் நிலையில் நிறுத்தி வைக்கப் போகிறார்களாம். அதாவது, எங்காவது கடையில் சரக்கு தீர்ந்து விட்டதாக தகவல் கிடைத்தால் உடனடியாக அங்கு போய் சரக்குகளை இறக்குவதற்காக இந்தத் திட்டம்.
எந்தக் கடையிலும் சரக்கு தீர்ந்து விட்டது என்ற பேச்சுக்கே இடமில்லாத வகையில் ஆயத்த நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டு மது விற்பனை கண்காணிக்கப்படவுள்ளதாம்.
இந்த ஆண்டு ரூ. 300 கோடி அளவுக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாம் டாஸ்மாக் நிறுவனம்.
தமிழக அரசின் இந்த சிறப்பு ஏற்பாடு காரணமாக, பட்டாசு வெடித்தோமா, பாட்டிலை திறந்தோமா என்று குடிகாரர்கள், சந்தோஷமாக தீபாவளியைக் கொண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications