காந்தி நினைவிடத்திற்கு அரிய நினைவுப் பரிசை அளித்த ஒபாமா
டெல்லி: மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு இன்று விஜயம் செய்து தனது மானசீக குருக்களில் ஒருவரான காந்திக்கு அஞ்சலி செலுத்திய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அரிய நினைவுப் பரிசு ஒன்றையும் நினைவிடத்திற்கு அளித்தார்.
மார்ட்டின் லூதர் கிங் நினைவிடம் கட்டப் பயன்படுத்தப்பட்ட கல்தான் அந்த நினைவுப் பரிசு. ஒபாமாவின் மானசீக குருக்கள் இருவர், ஒருவர் மார்ட்டின் லூதர் கிங், இன்னொருவர் காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.
மார்ட்டின் லூதர் கிங் பிறந்த பூமியிலிருந்து காந்தி பிறந்த பூமிக்கு வந்துள்ள ஒபாமா, காந்தி நினைவிடம் அமைந்துள்ள ராஜ்காட்டிற்கு இன்று காலை வந்தபோது மிகவும் நெகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.
காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அவர் நீண்ட நேரம் கண்களை மூடி, கைகளைக் கூப்பியபடி நின்றிருந்தார். பின்னர் ராஜ்காட் காந்தி சமாதி கமிட்டி செயலாளர் ரஜனீஷ் குமாரிடம் தனது நினைவுப் பரிசை அவர் அளித்தார்.
பின்னர் மகாத்மா காந்தி நினைவிடம் குறித்து ஒபாமா கூறுகையில், மிகவும் எளி்மையாக, அழகாக உள்ளது என்றார். உடன் இருந்த மிஷல் ஒபாமா, மிகவும் அழகாக இருக்கிறது என்றார்.
தொடர்ந்து ஒபாமா கூறுகையில், உலகத்தையே மாற்றியமைத்த பிதாமகன் காந்தியடிகள். அவர் போதித்த அமைதி, சகிப்புத்தன்மை, பிறர் மீது அன்பு காட்டுவது ஆகியவை மிக உயர்ந்த தத்துவங்கள். அவற்றைப் போதித்த அந்த ஆத்மாவை எப்போதும் நாங்கள் நினைவு கூருவோம் என்றார்.