சர்ச்சைக்குள்ளான சிங்கூர் நிலத்தில் டாடாவின் புதிய தொழிற்சாலைகள்
டெல்லி: பெரும் சர்ச்சைக்குள்ளான சிங்கூர் நிலத்தில், புதிய தொழிற்சாலைத் திட்டங்களைக் கொண்டு வருவதாக அறிவித்துள்ளது டாடா மோட்டார்ஸ்.
டாடாவின் மலிவு விலை நானோ காரை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடம் இந்த சிங்கூர் நிலம். மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளது. ஆனால் அங்குள்ள விவசாயிகளின் எதிர்ப்பு, அவர்களை ஒருங்கிணைத்துப் போராட்டம் நடத்திய மம்தா பானர்ஜியின் எதிர்ப்பு போன்ற காரணங்களால் சிங்கூர் நிலத்தில் நானோ தொழிற்சாலை திட்டத்தை டாடா கைவிட்டது. அந்த தொழிற்சாலையை குஜராத்துக்கு மாற்றிக் கொண்டது.
சிங்கூர் நிலத்தை டாடாவுக்கு ஒதுக்கியதற்கு எதிராக போராட்டம் நடத்திவரும் குழுக்கள், டாடா நிறுவனம் இந்த நிலத்தைப் பயன்படுத்தாத நிலையில் சும்மா வைத்திருக்கக் கூடாது என்றும், விவசாயிகளுக்கு உபயோகப்படும் விதத்தில் திருப்பித் தந்துவிட வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளன. டாடா இந்த நிலத்தை பயன்படுத்தாவிட்டால், உடனே திருப்பித் தந்துவிட வேண்டும் என்று மேற்கு வங்க மாநில அரசும் கூறியுள்ளது.
ஆனால் நானோவுக்காக கட்டப்பட்ட தொழிற்சாலை மற்றும் நிலப் பகுதியில் வேறு சில திட்டங்களைத் தொடங்கப் போவதாக டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.
சிங்கூர் நிலம் இன்னமும் தங்கள் வசமே உள்ளதாகவும், இதனை ஆண்டுக்கு ரூ 1 கோடி வாடகை என்ற அடிப்படையில் 90 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்திருப்பதாகவும் உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ள டாடா மோட்டார்ஸ், இந்த நிலத்தை குத்தகைக்கு எடுத்ததால் ரூ 500 கோடியை இழந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
இந்த விவகாரம் வரும் மே 2011-ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அப்போது டாடா மோட்டார்ஸின் வசமுள்ள சிங்கூர் நிலத்துக்கு எதிராக தொடரப்பட்டுள்ள மற்ற அனைத்து வழக்குகளும் சேர்த்துக் கொள்ளப்படும்.