மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியைத் தாண்டியது தொட்டது
மேட்டூர்: இந்த ஆண்டில் முதல் முறையாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 100 அடியை எட்டியது. இன்று காலை அது 100 அடியைத் தாண்டி விட்டது. தொடர்ந்து நீர் வந்து கொண்டிருப்பதால் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை விரைவில் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை கடந்த ஜூலை மாதம் 28-ம் தேதி திறந்து விடப்பட்டது. இதையடுத்து அணையின் நீர்மட்டம் 60 அடிக்கும் கீழ் சென்றது.
இந்நிலையில் கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் அணைக்கு வரும் நீர் வரத்து அதிகரித்தது. கர்நாடக அரசும் கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பியதையடுத்து தண்ணீர் திறந்துவிட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 60 ஆயிரம் கனஅடிக்கும் மேல் நீர் வரத் துவங்கியது.
இதற்கிடையே டெல்டா பாசன பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் தண்ணீர் தேவை குறைந்தது. இதனால் பாசனத்திற்காக திறந்துவிடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதாலும், நீர்வரத்து அதிகரித்ததாலும் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்நதது.
கடந்த 8-ம் தேதி இரவு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியைத் தாண்டியது. மழை குறைந்தபோதிலும், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் அணையின் நீர்மட்டம் அதிகரித்து வந்தது. அணைக்கு வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்ததால் அணையின் நீர்மட்டம் உயர்ந்த வண்ணம் இருந்தது.
நேற்று மாலை 4 மணிக்கு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99.36 அடியைத் தொட்டது. இரவில் 100 அடியை எட்டியது. அப்போது அணைக்கு வினாடிக்கு 38,382 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்காக வினாடிக்கு 400 கனஅடி திறக்கப்படுகிறது.
இதே அளவு தண்ணீர் வந்து கொண்டிருந்தால் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டில் முதல் முறையாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியைத் தொட்டுள்ளது. இதனால் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications