சென்னை அருகே 4 பள்ளி மாணவிகள் மயக்கி வேனில் கடத்தல்: மயக்கம் தெளிந்ததால் வழியில் விடப்பட்டனர்
சென்னை: சென்னை அருகே 4 பள்ளி மாணவிகளை வேனில் கடத்திய கும்பல் அவர்களுக்கு மயக்கம் தெளிந்ததால் கீழே தள்ளிவிட்டுச் சென்று விட்டது.
சென்னை அருகே உள்ள குன்றத்தூர் வள்ளுவர் அரசினர் நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் நதியா (12), பூங்கொடி (12), மீனா (13), காயத்திரி (13). இவர்களை நேற்று காலை பெரியபாளையம் பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருக்கையில் அங்கு வேனில் வந்த ஒரு கும்பல் கடத்தியது.
பின்னர் அவர்களை மயக்க மருந்து கொடுத்து மயங்க வைத்துள்ளனர். ஆனால் வழியில் மாணவிகளுக்கு மயக்கம் தெளிந்து அவர்கள் கூச்சலிட்டதால் அவர்களை கீழே தள்ளிவிட்டு அக்கும்பல் ஓடி விட்டது.
இது குறித்து பெரியபாளையம் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியம் மாணவிகளின் பெற்றோர்களுக்கும், குன்றத்தூர் காவல் நிலையத்துக்கும் தகவல் கொடுத்தார். பின்னர் பெற்றோர்கள் வந்து அவர்களை அழைத்துச் சென்றனர். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
தலைமையாசிரியை சஸ்பெண்டு
சேலம் கிச்சிப்பாளையம் பாவடி தொடக்கப்பள்ளியில் 4-வது வகுப்பு படித்து வந்த 10 வயது மாணவியை பள்ளிக்கு பெயிண்ட் அடிக்க வந்த தொழிலாளி கடத்திச் சென்று பாலியியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
அந்நேரத்தில் அந்த வழியாக வந்த ரோந்துபணி போலீசார் சிறுமியை மீட்டு, பெயிண்ட் அடிக்கும் தொழிலாளியை கைது செய்தனர்.
இது குறித்து சேலம் மாவட்ட கலெக்டரின் அறிவுரையின்படி மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி வாசு மற்றும் கல்வி துறை அதிகாரிகள் பள்ளி தலைமையாசிரியை காயத்ரியிடம் விசாரணை நடந்தியதில் அவருக்கு சிறுமி கடத்தப்பட்டதே தெரியாது என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
இது குறித்து தொடக்க கல்வி அதிகாரி வாசு கூறுகையில்,
பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது. அவர்கள் தினமும் பள்ளிக்கு நடந்து வருகிறார்களா, வாகனத்தில் வருகிறார்களா என்பதை ஆசிரியர்கள் ஒரு பதிவேட்டில் பதிவு செய்து அதை பராமரிக்க வேண்டும்.
மேலும், அவர்கள் பள்ளிக்கு வரும்போதும், திரும்பிச் செல்லும்போதும் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.