63 ஆண்டுகளாக மின் இணைப்பு இல்லாத கிராமத்துக்கு மின் இணைப்பு
குலசேகரம்: நாடு சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகளுக்கு பிறகு குமரி மாவட்டத்தின் மலை கிராமமான மணலோடை பகுதிக்கு தற்போது மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் சிற்றார் மருதம்பாறை, கல்லார் குற்றியார், கீரிப்பாறை, பரணியார், மணலோடை ஆகிய பகுதிகளை அரசு ரப்பர் கழகம் பல டிவிஷன்களாக பிரித்து தொழிலாளர்களுக்கு குடியிருப்புகள் கட்டிக் கொடுத்துள்ளது.
இதி்ல் மணலோடை தவிர மற்ற டிவிஷன்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுவிட்டது. மணலோடை டிவிஷன் குடியிருப்புக்கு மின் இணைப்பு வழங்க கடந்த 1975-ம் ஆண்டு வீடுகளுக்கு வயரிங் செய்யப்பட்டது. இந்நிலையில் மின்சாரம் கொண்டு செல்ல ஏராளமான மின்கம்பம் நடவேண்டும். இதற்காகும் செலவு ரூ.78 லட்சத்தை ரப்பர் கழகம் வழங்க வேண்டும் என்று மின்வாரியம் கோரிக்கை வைத்தது. இந்த தொகையை ரப்பர் கழகம் தர முன்வரவில்லை.
இந்த நிலையில் மலைவாழ் பாதுகாப்பு சட்டம் மூலம் அருகேயுள்ள மலைப்பகுதிக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. மணலோடை பகுதிக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை.
இதை கண்டித்து சிஐடியு, ஐஎன்டியுசி தொழிற்சங்கங்கள் போராட்டங்கள் நடத்தின. தற்போது மாவட்ட நிர்வாகமும், மின்வாரியமும் எடுத்த நடவடிக்கையால் கடந்த வாரம் மணலோடை டிவிஷனுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. இதனால் மணலோடை கிராம மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications