சர்ச் காம்பவுண்ட் சுவர் கட்ட பொது மக்கள் எதிர்ப்பு-சாலை மறியல்
ஆறுமுகனேரி: தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே கிறிஸ்துவ ஆலய காம்பவுண்ட் சுவர் கட்ட அப் பகுதி பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடு்பட்டனர்.
ஆறுமுகநேரி அருகே உள்ளது தலைவன்வடலி கிராமம். இங்கு 1500 குடும்பங்கள் வசிக்கின்றனர். இக் கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாக தனியார் இடத்தில் சர்ச் கட்டுவது தொடர்பாக இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது.
இப் பிரச்சனை தொடர்பாக கிராம மக்கள் பலமுறை பலகட்ட போராட்டங்களை நடத்தி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.மேலும், சர்ச் கட்டுவது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையிலும் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் சர்ச்சைக்குரிய 3 ஏக்கர் 48 சென்ட்டில் காம்பவுண்ட் சுவர் அமைப்பதற்கு கோர்ட்டில் அனுமதி பெற்றதாக கூறப்படுகிறது.
ஆனால், இந்த இடத்திற்கு அருகில் இசக்கியம்மன் கோயில் மற்றும் இடுகாடு ஆகியவை உள்ளது. எனவே சர்ச்சைக்குரிய இடத்தில் காம்பவுண்ட் சுவர் கட்ட கூடாது என கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையில் வந்த காவல்துறையினர் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிட செய்தார்.
இதனையடுத்து, காம்பவுண்ட் சுவர் கட்டுவது தொடர்பாக திருச்செந்தூர் ஆர்டிஒ முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி கொள்வது என முடிவு செய்யப்பட்டது. இதனால் ஆறுமுகநேரி - ஆத்தூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.