ரூ. 1.5 கோடி கேட்டு கடத்தப்பட்ட தொழிலதிபர் மகன் திடீர் விடுதலை

கோவையில் அக்கா, தம்பியான இரு சிறார்கள் கடத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மோகனகிருஷ்ணன், மனோகரன் ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர். இதில் மோகனகிருஷ்ணன் என்கெளன்டரில் கொல்லப்பட்டார்.
இந்த நிலையில் சென்னையில் கீர்த்திவாசன் என்ற சிறுவனை இரண்டு பொறியியல் படிப்பு படித்த இளைஞர்கள் துணிகரமாக கடத்தி ரூ. 1 கோடி பணத்தைப் பறித்தனர். அவர்களை மிகவும் சாதுரியமாக செயல்பட்டு போலீஸார் வளைத்துப் பிடித்தனர்.
இந்த சம்பவங்கள் நடந்தும் கூட கடத்தல்காரர்களுக்கு துணிச்சல் இன்னும் போகவில்லை என்பதை நிரூபித்துள்ளது சென்னையில் நடந்துள்ள ஒரு கடத்தல் சம்பவம்.
சென்னை பாரிமுனையில் வெளிநாட்டு பொருட்களை இறக்குவமதி செய்து மொத்த வியாபாரம் செய்துவருகிறார் காஜா. இவர் செகரட்டரியேட் காலணி ஆறாவது தெருவில் ஏ.கே.நகரில் வசித்து வருகிறார்.
இவரது மகன் ஹசன் தந்தையின் தொழிலுக்கு உதவியாக இருந்து வருகிறார். இவர் நேற்று இரவு கடையில் வியாபாரமான பணத்தை எடுத்துக்கொண்டு வீடு திரும்பினார்.
வீடு அருகே வந்ததும் மர்ம கும்பல் ஒன்று ஆட்டோ டிரைவரை அடித்து போட்டுவிட்டு, ஆட்டோவுடன் கடத்திச்சென்றது. தப்பிவந்த ஆட்டோ டிரைவர் போலீசாருக்கு அளித்த புகாரின் பேரில் காவல் துறை அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஹசனை பத்திரமாக மீட்க போலீஸார் களம் இறங்கினர். நகர் முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். இந்த நிலையில், இன்று காலை 8.30 மணிக்கு காஜா செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம கும்பல், ஒன்றரை கோடி கொடுத்தால் மகனை விடுவிப்போம் என்று கூறியுள்ளது.
இதையடுத்து கடத்தல் கும்பலைப் பிடிக்க போலீஸார் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். இந்த சமயத்தில், இன்று பிற்பகல் ஒரு மணி வாக்கில், திருவள்ளூரில் ஹசனை விடுவித்து விட்டு தப்பியுள்ளது கடத்தல் கும்பல். பணம் கொடுத்ததால் ஹசன் விடுவிக்கப்பட்டாரா என்பது தெரியவில்லை. தற்போது ஹசனை போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications