சென்னை-புதுச்சேரி ஓடும் பஸ்சில் டிரைவருக்கு மாரடைப்பு-பலி: பஸ்ஸை நிறுத்தியதால் உயிர் தப்பிய பயணிகள்
சென்னை: சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு அரசுப் பேருந்தை ஓட்டிச் சென்ற டிரைவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கையிலேயே உயிரிழந்தார். ஆனால், நெஞ்சு வலி ஏற்பட்டவுடன் பஸ்சை அவர் ஓரமாக நிறுத்திவிட்டதால் பயணிகள் உயிர் தப்பினர்.
அரசுப் போக்குவரத்து கழகத்தின் மதுராந்தகம் டெப்போவில் டிரைவராக பணியாற்றி வந்தவர் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த மணிமாறன் (47).
இவர் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து புதுச்சேரிக்கு பேருந்தை ஓட்டிச் சென்றார். அதில் 40 பயணிகள் இருந்தனர்.
நள்ளிரவு 12 மணியளவில் கிழக்கு கடற்கரை சாலையில் பஸ் சென்று கொண்டிருந்தது. கல்பாக்கத்தைத் தாண்டி பனையூர் என்ற கிராமம் அருகே சென்றபோது டிரைவர் மணிமாறனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதையடுத்து உடனடியாக பஸ்ஸை ரோட்டோரமாக நிறுத்திவிட்டு டிரைவர் மணிமாறன் தனது இருக்கையிலேயே சரிந்தார். அந்த இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
பஸ்சை சாலை ஓரமாக நிறுத்தியதால் 40 பயணிகளும் உயிர் தப்பினர்.