தமிழகத்தில் ராகுல் 2 நாள் சுற்றுப்பயணம்-கருணாநிதியை சந்திப்பாரா?
சென்னை, மதுரை, திருச்சி, விழுப்புரம், நெல்லை, திருப்பூர் ஆகிய இடங்களுக்குப் பயணம் செய்யும் ராகுல் இந்த முறையாவது தங்கள் கூட்டணியில் இடம் பெற்றுள்ள திமுக தலைவரான முதல்வர் கருணாநிதியை சந்திப்பாரா என்று தெரியவில்லை.
தமிழ்நாட்டில் 13 லட்சம் பேர் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து நடந்த நிர்வாகிகள் தேர்தலில் பல்வேறு பதவிகளுக்கு 60,000 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த புதிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவும், கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசிக்கவும் ராகுல் காந்தி வரும் 22, 23 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார்.
22ம தேதி காலை சென்னையின் 14 சட்டமன்றத் தொகுதிகளின் நிர்வாகிகளை சந்திக்கிறார். பின்னர் விழுப்புரம் செல்லும் ராகுல் அங்கு காங்கிரஸ் தாழ்த்தப்பட்டோர் பிரிவு நிர்வாகிகளையும், பினனர் திருச்சி சென்று அங்கு இளைஞர் காங்கிரஸ் பெண் நிர்வாகிகளையும் சந்தித்துப் பேசுகிறார்.
23ம் தேதி திருப்பூர், மதுரை, நெல்லை ஆகிய இடங்களில் நிர்வாகிகளை சந்திக்கிறார்.
அவரது சுற்றுப் பயண ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நடந்தது. அதில் இளைஞர் காங்கிரசின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஸ்ரீய வரத்சிங், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ் மற்றும் மாவட்ட தøலைவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
கருணாநிதியை சந்திப்பாரா?:
இதற்கு முன் தமிழகம் வந்த ராகுல் காந்தி முதல்வர் கருணாநிதியை சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போத ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் திமுகவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் ராகுல் தமிழகம் வருவது முக்கியத்தும் பெற்றுள்ளது.
இந்தமுறையாவது அவர் முதல்வர் கருணாநிதியை சந்திப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.