கன்னியாகுமரி கப்பல் போக்குவரத்து ஊழியர்கள் 15ம் தேதி முதல் 3 நாள் ஸ்டிரைக்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து ஊழியர்கள் வரும் பொங்கல் தினம் முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் பொங்கல் விடுமுறையின்போது கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் படகு சவாரியை அனுபவிக்க முடியாத நிலை ஏற்படவுள்ளது.
கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்க்கச் செல்வதற்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்லும் படகு சேவையை பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் நடத்தி வருகிறது. இங்கு ஏராளமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அரசு ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்துவது வழக்கம். கடந்த 3 ஆண்டுகளுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் கடந்த 2007-ம் ஆண்டே முடிவடைந்து விட்டது. அதன்பிறகு அடுத்த 3 ஆண்டுகளுக்கான புதிய ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்காக நிர்வாகம் பலமுறை தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை ஒப்பந்தம் ஏற்படவில்லை.
இதனையடுத்து பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அண்ணா படகு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் மற்றும் சிஐடியு தொழிற்சங்கம் போன்றவை புதிய ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக அமல்படுத்தக் கோரி பொங்கல் பண்டிகையான வரும் 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை மூன்று நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது.
குமரியில் தற்போது சபரிமலை ஐயப்ப பக்தர்களின் வருகை மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகளவில் உள்ளது. பொங்கல் தின விடுமுறையில் இது மேலும் பன்மடங்காக உயரும். பொங்கல் பண்டிகையையொட்டி படகு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்திருப்பது சிக்கலை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications