கையாலாகாத மத்திய அரசால் விலைவாசி விண்ணைத் தொட்டுள்ளது-சீமான்
சென்னை: கையாலாகாத மத்திய, மாநில அரசுகளினால் விலைவாசி விண்ணைத் தொட்டு விட்டது. இந்த நிலையில் பெட்ரோல் விலை உயர்வு அனைத்து மக்களையும் கடுமையாகப் பாதிப்படையச் செய்துள்ளது என்று கூறியுள்ளார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்.
இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த ஆறு மாதங்களில் ஏழாவது முறையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு மாத காலதிற்குள் இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது 7வது முறையாக ரூ. 2.54க்கு உயர்த்தப்பட்டுள்ளது.
பெட்ரோலிய பொருட்களின் விலையை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை பெட்ரோலிய நிறுவனங்களுக்கே அளித்ததே கடந்த ஆறு மாதத்தில் ஏழு முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டமைக்கு முக்கிய காரணம் ஆகும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த பெட்ரோல் விலை நிர்ணய அதிகாரம் கடந்த ஜூன் மாதம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டது.
இந்த அதிகாரத்தை திரும்பப் பெருவதன் மூலம் எண்ணெய் நிறுவனங்களின் ஏகாதிபத்தியத்தை ஒழிக்க முடியும். மத்திய அரசில் தனக்கு செல்வாக்கு இருப்பதாக கூறி தம்பட்டம் அடிக்கும் கருணாநிதி, தனக்கும் தன் குடும்பத்திற்கும் வேண்டிய இலாகாக்களைப் பெற விமானம் ஏறிச் செல்லும் கருனாநிதி மக்களைப் பாதிக்கும் இது போன்ற பிரச்சனைகளில் மட்டும் மத்தியில் ஆதரித்து விட்டு, இங்கோ பிரதமருக்கு கடிதம் எழுதி தனக்கும் மத்திய அரசுக்கும் தொடர்பு இல்லாதது போல் நடந்து கொள்கிறார்.
ஏற்கனவே கையாலாகாத மத்திய மாநில அரசுகளினால் விலைவாசி விண்ணைத் தொட்டு விட்டது. இந்த நிலையில் பெட்ரோல் விலை உயர்வு அனைத்து மக்களையும் கடுமையாகப் பாதிப்படையச் செய்துள்ளது. இந்த விலை உயர்வை திரும்பப் பெறவில்லையெனில் கருணாநிதி மற்றும் காங்கிரஸ், கூட்டணிக்கு மக்கள் வரும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நல்ல பாடம் கற்பிப்பார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications