ஆப்பிரிக்காவின் 54வது நாடாக ஜூலையில் பிறக்கிறது தெற்கு சூடான்

வட கிழக்கு ஆப்பிரிக்காவில் எகிப்துக்கு அருகில் உள்ள நாடுதான் சூடான். ஆப்பிரிக்கா மற்றும் அரபு நாடுகளிலேயே மிகப் பெரிய நாடு சூடான்தான்.
உள்நாட்டு மோதல்களுக்குப் பெயர் பெற்றது சூடான். இந்த மோதல்களே இந்த நாட்டை வறுமையின் கோரப் பிடிக்கு்க கொண்டு போய் விட்டன. 1956ம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் எகிப்திடமிருந்து சுதந்திரம் பெற்று சூடான். ஆனால் அன்று முதல் இன்று வரை இடைவிடாத உள்நாட்டு மோதல்களால் நாடே சுடுகாடாகிப் போய் விட்டது.
1955 முதல் 72 வரை முதல் சூடான் உள்நாட்டுப் போர் நடந்தது. வடக்கு சூடானியர்களுக்கும் (இவர்கள் அரபு மற்றும் நுபியன் இனத்தைச் சேர்ந்தவர்கள்), தெற்கு சூடானில் இருந்த கிறிஸ்தவர்களுக்கும் இடையிலான மோதல்களால் நாடே பிளவுபட்டுக் கிடந்தது.
இந்த மோதல்கள் காரணமாக 1983ம் ஆண்டும் 2ம் சூடான் உள்நாட்டுப் போர் மூண்டது. இந்த நிலையில் 1989ம் ஆண்டு ராணுவத் தளபதி ஒமர் அல் பஷீர் ரத்தம் சிந்தாத புரட்சியின் மூலம் ஆட்சியைப் பிடித்தார். தன்னை அதிபராகவும் அறிவித்துக் கொண்டார். இவர் பின்னர் இனஅழிப்பில் ஈடுபட்டதாகவும், பெரும் போர்க் குற்றங்கள் புரிந்ததாகவும் சர்வதேச கோர்ட்டால் குற்றம் சாட்ட்பபட்டு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
2005ம் ஆண்டு சூடானில் புதிய அரசியல் சட்டம் அமல்படுத்தப்பட்டது. தெற்கில் இருந்து வந்த புரட்சிக் குழுக்களுக்கு சில வரையறுக்கப்பட்ட சுயாட்சி அதிகாரமும் வழங்கப்பட்டதால் பிரச்சினை ஓரளவு தணிந்தது. இருப்பினும் வடக்கு சூடானோடு தாங்கள் சேர்ந்து வாழ்வது இயலாது என்று தொடர்ந்து தெற்கு சூடான் மக்கள் கூறி வந்ததைத் தொடர்ந்து ஜனவரி மாதம், தெற்கு சூடான் தனி நாடாகலாமா என்று கேட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் 98 சதவீதம் பேர் தெற்கு சூடான் தனி நாடாகப் பிரிய ஆதரவு தெரிவித்திருந்தனர். 1 சதவீதம் பேர் பிரியக் கூடாது என்று கூறியிருந்தனர். ஆதரவு கிடைத்தது.
இதைத் தொடர்ந்து தற்போது தெற்கு சூடான் தனி நாடாக உதயமாகவுள்ளது. வருகிற ஜூலை மாதம் தெற்கு சூடான் முறைப்படி தனி நாடாகிறது.
ஜூலை மாதம் 9ம் தேதி புதிய தெற்கு சூடான் குடியரசு தனி நாடாக உதயமாகிறது. இந்த புதிய நாட்டில் 10 மாகாணங்கள் இடம் பெறவுள்ளன. இந்தப் புதிய நாடு, ஆப்பிரிக்காவின் 54வது நாடாகும்.
துனிஷியாவில் போடப்பட்ட விதை:
சூடானிலும் சரி, இன்று எகிப்திலும் சரி மக்கள் போராட்டங்கள் பெருத்து வெடிக்க முதல் விதை துனிஷியாவில்தான் போடப்பட்டது. இதுவும் வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள குட்டி நாடுதான். அரேபியர்கள் அதிகம் வசிக்கும் இந்த நாட்டில் கடந்த 1989ம் ஆண்டு முதல் அதிபர் பதவியில் இருந்து வந்தவர் ஜைன் அல் அபிதின் பென் அலி.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை தூக்கி எறிந்து விட்டு பதவிக்கு வந்தவர் அலி. இவருக்கு எதிராக கடந்த 22 வருடங்களுக்கும் மேலாக மக்கள் போராட்டங்களை நடத்தி வந்தனர். சமீபத்தில் அலிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. இதைத் தாங்க முடியாமல் சமீபத்தில் நாட்டை விட்டு வெளியேறினார் அலி.
இங்கு வெடித்த போராட்டம்தான் தற்போது எகிப்தில் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 30 வருடங்களாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் ஹோஸ்னி முபாரக்கின் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட மக்கள் தெருக்களை போராட்டக்களமாக்கி முபாரக்கை நடுங்க வைத்து வருகின்றனர்.
ஆப்பிரிக்கக் கண்டத்தில் இந்த அதிர்வுகள் இடம் பெற்றாலும் கூட மக்கள் புரட்சி வெடித்திருப்பது அரபு நாடுகளில் என்பதால் நீண்ட காலமாக பதவியில் இருந்து வரும் அரபு நாடுகளின் தலைவர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். அதிலும் அரபு தலைவர்களில் மிகவும் முக்கியமானவர் முபாரக் என்பதால் அவரது எதிர்காலம் குறித்து அனைத்து அரபு நாடுகளும் கூர்ந்து கவனித்து வருகின்றன.
துனிஷியாவில் போடப்பட்ட விதை இன்று எகிப்திலும், நேற்று சூடானிலும் ஆட்சி பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளது உலக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
உலக அளவில் 1990ம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை 33 புதிய நாடுகள் உதயமாகியுள்ளன. எங்கெல்லாம் இனக் குழுக்களுக்கிடையே பிரிவுகள், மோதல்கள் மூண்டதோ அங்கெல்லாம் கிட்டத்தட்ட தனி நாடுகளை உருவாக்கிக் கொடுத்துள்ளது சர்வதேச சமுதாயம்- ஈழத்தைத் தவிர.
நேற்று துனிஷியா, சூடான், இன்று எகிப்து. நாளை லிபியாவா என்ற பெரும் கேள்வியும் அரபு நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications