ஒவ்வொரு தொண்டரும் 10 வாக்காளர்களை பூத்துக்கு கொண்டு வர வேண்டும்! - ஜெ கட்டளை
சென்னை: ஒவ்வொரு அதிமுக தொண்டரும் குறைந்தபட்சம் 10 வாக்காளர்களையாவது வாக்குச் சாவடிக்கு கொண்டு வர வேண்டும் என்று அதிமுகவினருக்கு கட்டளை பிறப்பித்துள்ளார் அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா.
நடிகர்கள் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தொண்டர்கள், மாணவ மாணவியர்கள் 7 சட்டக்கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் 9 ஆயிரம் பேர் நேற்று மாலை அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
அவர்கள் மத்தியில் ஜெயலலிதா பேசியது:
"இன்று கழகத்தில் இணைய வந்துள்ள உங்களை கண்டு உள்ளபடியே நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். அ.தி.மு.க. பொது செயலாளர் என்ற முறையில் உங்கள் அனைவரையும் அன்புடன் வருக வருக என வரவேற்கிறேன்.
இன்று தமிழ்நாடு தி.மு.க. ஆட்சியில் தவித்துக் கொண்டு இருக்கிறது. இருளில் மூழ்கி கிடக்கிறது. தமிழ்நாட்டை அவர்களிடம் இருந்து விடுவிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் உங்களுக்கு இருக்கிறது.
உங்களை நான் கேட்டுக் கொள்வதெல்லாம் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் உங்களில் உள்ள ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் 10 பேரையாவது வாக்குச் சாவடிகளுக்கு அழைத்துச் சென்று வாக்களிக்க செய்ய வேண்டும்.
இந்த ஆட்சியை அகற்ற நீங்கள் உதவ வேண்டும். உங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும். நீங்கள் எத்தகைய நம்பிக்கையுடன் கழகத்தில் இணைய வந்துள்ளீர்களோ அந்த நம்பிக்கை வீண் போகாது. உங்களுக்கெல்லாம் மிக ஒளிமயமான எதிர்காலம் அமைய எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்..." என்றார்.












Click it and Unblock the Notifications