தேர்தலில் வென்று அதிமுக மீண்டும் தனித்து ஆட்சி அமைக்கும்-வைகோ
களியக்காவிளை: வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
களியக்காவிளையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், முல்லைப் பெரியாறு, பாலாறு, காவிரி போன்ற நதிகளில் இருந்தும் நமக்கு தண்ணீர் கிடைக்கவில்லை.
அதற்கு மத்திய, மாநில அரசுகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 5 மாவட்ட மக்கள் பயன் பெறும் முல்லைப் பெரியாறு அணையை உடைக்க கேரள அரசு சதி செய்கிறது. கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கிறது. இதனால் தமிழகம் தவிப்புக்குள்ளாகி உள்ளது.
ஈழத்தில் இன படுகொலை இதயத்தில் ரத்தம் என்ற குறுந் தகட்டை வெளியிட்டு உள்ளோம். இதை இளைஞர்கள் பொதுமக்களுக்கு போட்டு காண்பிக்க வேண்டும். தமிழ் மட்டும் அல்லாமல் ஆங்கிலம், போர்த்துக்கீசியம் என பல மொழிகளில் பிரதிகள் எடுக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டுள்ளது.
ஈழத்துக்கு சென்று வந்த பெண் வக்கீல் கைது செய்யப்பட்டபோது இந்திய பிரதமரிடம் அவரை விடுதலை செய்ய வலியுறுத்தினேன். இதன் காரணமாக அவர் விடுதலை செய்யப்பட்டார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி யார், யாரிடம் சென்றது என்பதை கூற ராசா மறுப்பதால் அவருக்கு மேலும் 2 நாள் சி.பி.ஐ. காவல் நீடித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது நெஞ்சை பதற வைக்கும் படுகொலைகள் நடந்துள்ளன. உடமைகள் சொத்துகளுக்கு பாதுகாப்பு இல்லை. போலீசார் கைக்கட்டி நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலை விரைவில் மாறும். அதிமுக-மதிமுக கூட்டணி வரும் சட்டசபை பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெறும். மீண்டும் புரட்சித் தலைவியின் தலைமையில் அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் என்றார் வைகோ.
ஆட்சியில் பங்கு தந்தால் தான் அதிமுகவுடன் கூட்டணி என்று தேமுதிக நிபந்தனை விதித்துள்ள நிலையில், வைகோவின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.












Click it and Unblock the Notifications